தமிழக-கர்நாடக எல்லையை மூட கிளம்பிய வாட்டாள்.. அங்கேயே வைத்துத் தூக்கிய போலீஸ்!
பெங்களூர்: தமிழக-கர்நாடக எல்லையை மூடும் போராட்டத்திற்கு கிளம்பிய, கன்னட அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ், தொண்டர்களோடு கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தையொட்டி தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் ஆரம்பிக்கிறது. இந்த இரு மாநில எல்லையை மூடி போராட்டம் நடத்தப்போவதாக கன்னட சளுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்தார். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இன்று மதியம் நூற்றுக்கணக்கான தொண்டர்களோடு வாட்டாள் நாகராஜ் எல்லை பகுதிக்கு புறப்பட்டார். அப்போது சிறிது தூரம் முன்பே போலீசார் சாலையை மறிக்கும் வகையில், தடுப்புகளை ஏற்படுத்தி, வாட்டாள் நாகராஜ் மற்றும் அவருடன் சென்ற தொண்டர்களை கைது செய்தனர்.
அப்போது, "நாங்கள் தீவிரவாதியோ.. நக்சலைட்டுகளோ அல்ல.. எங்களை ஏன் கைது செய்கிறீர்கள்" என போலீசாருடன் வாட்டாள் நாகராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனிடையே, அத்திபெலே-ஒசூர் எல்லை பகுதிக்கு கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் இன்று நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்திற்கு தண்ணீர் விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால், அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாக பரமேஷ்வர் தெரிவித்தார்.