ரத்தத்தை தருவோம்... சொட்டு காவிரி நீரை தர முடியாது... இது கர்நாடகா விடுதலைச் சிறுத்தைகள்
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டதற்கு கர்நாடகா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும்; உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள அளவே போதுமானது அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று அறிக்கை ஒன்றில் வலியுறுத்தி இருந்தார்.
மேலும் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்றும் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் கர்நாடகாவில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரோ தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா அரசு காவிரி நீரை திறந்துவிட்டதற்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ள அம்மாநில விடுதலைச் சிறுத்தைகள், ரத்தத்தை வேண்டுமானால் தருவோமே தவிர சொட்டு காவிரி நீரையும் தமிழகத்துக்கு தரமாட்டோம் என முழங்கி வருகின்றனர்.