கோலார் தங்க சுரங்கம் பக்கம் பார்வையைத் திருப்பும் வேதாந்தா குழுமம்
பெங்களூர்: கர்நாடகாவின் கோலார் தங்க சுரங்கத்தை ஏற்று நடத்த வாய்ப்பு கிடைத்தால் தமது நிறுவனம் அதை சிறப்பாக செயல்படுத்தும் என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கோலார் தங்க வயல்
உலகின் மிக ஆழமான 2வது தங்க சுரங்கம் கோலார் தங்க வயலாகும். இந்த ஆழமான சுரங்கத்தில்தான் 121 ஆண்டுகளாக லட்சக்கணக்கான தமிழர்களின் அயராத உழைப்பால் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது.
இருப்பு குறைவால் மூடல்
ஆனால் 2001ஆம் ஆண்டு தங்கத்தின் இருப்பு குறைவு, பிரித்தெடுக்க ஆகும் செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் கோலார் தங்க சுரங்கம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
லட்சக்கணக்கான தமிழர் தவிப்பு
திடீரென தங்க சுரங்கம் மூடப்பட்டதால் பணியாற்றிய பல்லாயிரம் ஊழியர்களும் சார்ந்திருந்த லட்சக்கணக்கான தமிழர்களும் வேலை வாய்ப்புகளை இழந்து பெரும் துயரத்தில் வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பாக பல நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டன.
எப்போது மீண்டும் திறப்பு?
இந்நிலையில் 1994, 97 மற்றும் 2000மாவது ஆண்டுகளில் அமைக்கப்பட்ட மூன்று நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் 2010ஆம் ஆண்டு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தன. அதில் கோலார் தங்க சுரங்கத்தில் 30 லட்சம் சன் இருப்பதாகவும் மேலும் 15 ஆண்டுகளுக்கு தங்கம் தோண்டியெடுக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கோலாரில் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணிக்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்தும் தொடங்கப்படவில்லை.
நம்பிக்கை தந்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு
நீண்ட தாமதத்துக்குப் பின்னர் கோலார் தங்க வயலை மூடியது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் தீர்ப்பு ஒன்றை அளித்தது. அதில் பாரத் கோல்ட்மைன் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகளை விற்க சர்வதேச டெண்டர் கோரும் மத்திய அரசின் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. இதனால் கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறக்கப்படும் நிலை உருவானது.
அரசு மும்முரம்
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய சுரங்க அமைச்சகம், பாரத் கோல்ட்மைன் லிமிடெட் சொத்துகளை விற்பனை செய்வது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அக்டோபர் 9-ந் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்குமாறும் கோரியுள்ளது.
முன்வரும் வேதாந்தா குழுமம்
இந்த நிலையில்தான் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வரும் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் கோலார் தங்க சுரங்கத்தை ஏற்று நடத்த வாய்ப்பு கிடைத்தால் தமது நிறுவனம் அதை செய்யும் என்று கூறியுள்ளார். தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வரும் நிலையில் தங்கத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதன் மூலம் பொருளாதார சரிவை மேம்படுத்த முடியும் என்பது அனில் அகர்வாலின் கருத்து.
வேதாந்தா ஏற்று நடத்தினால்..
அப்படி ஒருவேளை வேதாந்தா குழுமம் தங்க சுரங்கத்தை ஏற்று நடத்தினால் மீண்டும் லட்சக்கணக்கான தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.