வீரப்பன் கூட்டாளி சைமன் மரணம்.. சித்ரவதை செய்து கொல்லப்பட்டாரா என சந்தேகம்?
கர்நாடக சிறையில் உயிரிழந்த வீரப்பன் கூட்டாளி சைமன் சிறையில் சித்ரவதை செய்து கொல்லப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பெங்களூரு: கர்நாடக சிறையில் உயிரிழந்த வீரப்பன் கூட்டாளி சைமன் சிறையில் சித்ரவதை செய்து கொல்லப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலம் கொள்ளேகால் அருகே உள்ள ஒட்டர்தொட்டியை சேர்ந்தவர் சைமன். வீரப்பன் கூட்டாளியான இவர் 1993ஆம் ஆண்டு நடைபெற்ற கண்ணிவெடி தாக்குதலில் கர்நாடக போலீசார் 22 பேர் உயிரிழந்த வழக்கில் கைதானார்.
சைமன் உள்ளிட்ட 4 பேருக்கு தொடக்கத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பிறகு மரண தண்டனையாக மாற்றி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆயுள் தண்டனையாக குறைப்பு
இதைத்தொடர்ந்து மனித உரிமை அமைப்புகள் உச்சநீதிமன்றம் வரை சென்று சட்ட போராட்டம் நடத்தின. இந்த நிலையில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக நிறுத்தி வைக்கப்பட்டது.
உறவினர்கள் கோரிக்கை
இந்நிலையில் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்ட சைமனுக்கு கடந்த ஓராண்டாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வெளியில் சென்று சிகிச்சையளிக்குமாறு சைமனும் அவரது உறவினர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சிறை நிர்வாகம் மறுப்பு
ஆனால் சிறை நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவருக்கு சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றிரவு சைமனின் உடல்நிலை மோசமானது.
இதையடுத்து மைசூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைமனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சிறையில் சித்ரவதை
கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள சைமனுக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சைமன் திடீரென உயிரிழந்த சம்பவம் அவர் சிறையில் சித்ரவதை செய்து கொல்லப்பட்டாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.