காங். வேட்பாளர் சர்ச்சை ட்வீட்... எங்க ஒப்புதல் இல்லாமல் 'அட்மின்' போட்டது... மொய்லி குடும்பம் பல்டி
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு குறித்த ட்வீட் பதிவை வீரப்ப மொய்லி நீக்கிவிட்டார்.
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுவதாக ட்வீட் போட்டு பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி இப்போது மறுத்துள்ளார். தங்களது அனுமதி இல்லாமல் 'அட்மின்' இப்படி ஒரு ட்விட்டை போட்டுவிட்டதாக கூறியுள்ளார் வீரப்ப மொய்லி மகன் ஹர்ஷா மொய்லி.
வீரப்ப மொய்லி மற்றும் அவரது மகன் ஹர்ஷா மொய்லியின் பெயரிலான ட்விட்டர் பக்கங்களில் காங். வேட்பாளர் தேர்வை விமர்சித்து ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான பதிவுகள் போடப்பட்டிருந்தன. கர்நாடகா பொதுப்பணித்துறை அமைச்சர் மகாதேவப்பாவை விமர்சித்து இப்பதிவுகள் போடப்பட்டிருந்தன.
ட்வீட்டுகள் நீக்கம்
இது காங்கிரஸ் கட்சியில் மட்டுமல்ல.. கர்நாடகா அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வீரப்ப மொய்லி, ஹர்ஷா மொய்லி ட்விட்டர் பக்கங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
நான் எழுதுவதில்லை
இது குறித்து கருத்து தெரிவித்த வீரப்ப மொய்லி, என் பெயரிலான ட்விட்டர் அக்கவுண்ட் அதிகாரப்பூர்வமற்றது. கட்சி விவகாரங்களை இப்படி பொதுவெளியில் நான் ஒருபோதும் எழுவதில்லை என்றார்.
அட்மினால் வந்த வினை
ஹர்ஷா மொய்லியோ, எங்களது ட்விட்டர் அக்கவுண்ட்டுகளை நாங்கள் பயன்படுத்துவதில்லை. எங்களது அனுமதி இல்லாமல் அதை நிர்வகிப்பவர் போட்டிருக்கிறார். அனேகமாக எங்கள் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக்கிங் செய்யப்பட்டிருக்கலாம் என அந்தர் பல்டி அடித்தார்.
அட்மின் மீது பழிபோட்ட ராஜா
அண்மையில் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை குறித்து பாஜக தேசிய செயலர் எச்.ராஜா ஒரு பதிவைப் போட்டது சர்ச்சையானது. பின்னர் என் அட்மின் அனுமதி இல்லாமல் போட்டுவிட்டார் என எஸ்கேப்பானார் எச். ராஜா. அதேபாணியில் இப்போது வீரப்ப மொய்லி குடும்பமும் பல்டி அடித்துள்ளது.