வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கை எதிர்க்கும் வழக்கு: 2-வது நாளாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை!
1993ம் ஆண்டு தமிழக, கர்நாடக எல்லைப்பகுதியான பாலாறு அருகே வீரப்பனை தேடிச்சென்ற போலீஸ் வாகனம் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் போலீசார் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக 50 பேர் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இவர்களில் சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் மற்றும் ஞானபிரகாசம் ஆகிய 4 பேருக்கும் 2002ம் ஆண்டு மைசூர் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இதனை 2004ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையாக மாற்றி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தண்டனை பெற்ற 4 பேர் சார்பில் கடந்த 2004ம் ஆண்டு ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பப்பட்டது. அந்த மனுவை 9 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 13ந்தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.
இதனை எதிர்த்து 4 பேர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ஒருவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது இந்த வழக்கில் தான். எனவே, இது அரிதினும் அரிதான வழக்கு. சுமார் 20 ஆண்டுகளாக இந்த 4 பேரும் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.
9 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களது கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. அதேபோல், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது இவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுவது குறித்து எந்த ஒரு கருத்தும் கேட்கப்படவில்லை.
20 ஆண்டுகளாக ஒருவர் சிறையில் தனது வாழ்க்கையை கழித்தால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே, இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை குறைந்தபட்ச சிறை தண்டனையாக குறைக்க வேண்டும் என்றார்.
இந்த மனு மீது இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.