மனுதர்மத்தை, இந்துத்துவாவை ஏற்காத முற்போக்கான அறிவியல் மதம் வீரசைவம்: கர்நாடகா அமைச்சர் பசவராஜ்
மனுதர்மத்துக்கு எதிரான அறிவியல் பூர்வமான மதமே வீரசைவம் லிங்காயத் என கர்நாடகா அமைச்சர் பசவராஜ் கூறியுள்ளார்.
பெங்களூரு: பிறப்பின் அடிப்படையில் ஏற்ற தாழ்வை திணிக்கும் மனுதர்மத்தையும் இந்துத்துவாவையும் ஏற்காத முற்போக்கான அறிவியல் பூர்வமான மதம்தான் லிங்காயத்துகளின் வீரசைவம் என கர்நாடகா அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி கூறியுள்ளார்.
கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள லிங்காயத்துகளை லிங்காயத்துகள்- வீரசைவர்கள் என தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. கர்நாட்காவில் ஆளும் காங்கிரஸ் அரசும் இதை ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக கர்நாடகா மாநில அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி கூறியதாவது:
12-ம் நூற்றாண்டில் பசவேஸ்வராவால் நிறுத்தப்பட்ட தனி மதம்தான் வீரசைவம்- லிங்காயத் என்பது. இது இந்துமதத்தின் ஒரு பகுதியே அல்ல.
மனித விழுமியங்களுக்கு எதிரான மனுஸ்மிருதியை வீரசைவம் எதிர்க்கிறது. இந்துக்களின் கலாசாரத்தை எதிரொலிப்பவர்களாக லிங்காயத்துகள் இருந்தாலும் இந்துமதத்தின் ஒரு அங்கம் அல்ல.
எதியூரப்பா சார்ந்திருக்கும் சங்கபரிவாரங்கள் முன்வைக்கும் இந்துத்துவாவின் அங்கம் அல்ல வீரசைவர்கள். பிறப்பின் அடிப்படையிலான ஒடுக்குமுறை அமைப்புக்கு எதிராக முற்போக்கானதாக அறிவியல்பூர்வமானதாக பிறப்பெடுத்ததுதான் வீரசைவம்.
இவ்வாறு பசவராஜ் கூறினார்.