டெல்லியில் விண்ணைத் தொடும் காய்கறி விலை: மக்கள் அதிருப்தி
டெல்லி: டெல்லியில் காய்கறி விலை விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ளது. போதிய விளைச்சல் இன்மை மற்றும் பாகிஸ்தானுக்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்வது தான் அவற்றின் விலை உயரக் காரணம் என்று கூறப்படுகிறது.
டெல்லியில் காய்கறிகளின் விலை கடந்த 10 நாட்களுக்கு முன்பில் இருந்து அதிகரிக்கத் துவங்கியது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிட்டால் தக்காளி விலை தற்போது 10 முதல் 20 சதவீதம் உயர்ந்து கிலோ ரூ. 40 முதல் 50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறிகளின் விலை உயர்வால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
விளைச்சல்
இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தானிலும் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு இந்தியாவில் விளையும் தக்காளி மற்றும் பட்டானிக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.
ஏற்றுமதி
இந்திய விவசாயிகள் பாகிஸ்தானுக்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்வதால் இங்கு அவற்றின் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் அமிர்தசரஸ் மொத்த வியாபார மார்க்கெட்டில் ரூ.18-20க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.20-25க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் ரூ.14-19க்கு விற்ற பட்டானியின் விலை தற்போது ரூ.23 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான்
இந்தியாவில் இருந்து தினமும் 50-70 டிரக்குகளில் பட்டானியும், 15-20 டிரக்குகளில் இஞ்சியும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது வரும் பிப்ரவரி மாதம் வரை தொடரும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தக்காளி
திங்கட்கிழமை மட்டும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு 113 டிரக்குகளில் தக்காளி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக பாகிஸ்தானுக்கு தினமும் 80 முதல் 100 டிரக்குகளில் தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு டிரக்கிலும் 15 முதல் 20 டன் தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது என்று அமிர்தசரஸில் சுங்கத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காய்கறிகள்
டெல்லியில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.40 முதல் 60 வரை விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெண்டைக்காயின் விலை ரூ.80-100 ஆக உள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.20 முதல் 40 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து டெல்லி வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதும் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.