என்ன கொடுமை இது.. 1 மாதமாகியும் தமிழகம்-கர்நாடக எல்லையில் போக்குவரத்து இல்லை
பெங்களூர்: காவிரி பிரச்னையால், தமிழக-கர்நாடகா இடையே இன்று 28வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி, கடந்த 5ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கன்னட அமைப்பினர், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மறியல் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், முழுஅடைப்பு, வன்முறை போன்ற பல்வேறு சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டனர். அதேபோல் தமிழகத்திலும் கர்நாடகாவை கண்டித்து போராட்டங்கள் நடந்தன. இரு மாநிலத்திலும் அமைதியற்ற சூழல் நிலவியதால், பஸ், சரக்கு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இன்றுடன் 28 நாட்களாக தமிழக-கர்நாடக இடையேயான பஸ் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
லாரிகள் போக்குவரத்து 20 நாட் களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளதால், பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.போக்குவரத்து பாதிப்பால் தொழில்நிறுவனங்கள் மட்டுமின்றி, அங்குள்ள பணியாளர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், ஐடி நிறுவன ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமும் ஓசூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஜூஜூவாடி சென்று, பின்னர் அங்கிருந்து கர்நாடக எல்லையான அத்திபெலேவுக்கு நடந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். காவிரி விவகாரம் முடிவு எட்டாமல் இழுத்துக்கொண்டே செல்வதால் இரு மாநிலத்தை சேர்ந்த மக்களும், வியாபாரிகளும் கவலைக்குள்ளாகி உள்ளனர்.
இதற்கிடையே, வரும் 11ம் தேதி கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அங்கு நேற்று முன்தினம் முதல் விழா துவங்கியுள்ளது. தமிழக பக்தர்கள், சுற்றுலா பயணிகளால் மைசூர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக பதிவெண் வாகனங்களை தமிழகத்திற்குள்ளும், தமிழக பதிவெண் வாகனங்களை கர்நாடகாவிற்குள்ளும் செல்ல விடாமல் போலீசாரே தடுத்து வைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாதமாகப்போகும் நிலையில், பொதுமக்கள் பிரச்சினை சொல்லி மாளாது.