துணை ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் வெங்கையா இல்லை என்பது கன்பார்ம்!
ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு குழுவில் வெங்கையா நாயுடு இடம்பெற்றுள்ளதால் துணை ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் அவர் இல்லை என்பது உறுதியாக தெரிகிறது.
டெல்லி: பாஜக சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு குழுவில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இடம்பெற்றுள்ளதால், துணை ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் அவர் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இந்திய ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் தங்கள் கட்சியை சேர்ந்த ஒருவர்தான் ஜனாதிபதி மாளிகையில் குடியேற வேண்டும் என பாஜகவும், எதிர்க்கட்சிகளும் கடுமையாக போராடி வருகின்றனர்.
அதற்கேற்றாற் போல் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேட்பாளரை தேர்வு செய்ய போட்டா போட்டி நடக்கிறது. அதேசமயம் மதசார்பற்ற வேட்பாளர் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன.
தேர்தல் எப்போது?
இதனிடையே ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை 20-ஆம் தேதி நடைபெறும். இதற்காக அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
ஜனாதிபதி வேட்பாளர் யார்?
தாங்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளது பாஜக. ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரௌபதி முர்முவை வேட்பாளராக அறிவித்தால் பழங்குடியினத்தை சேர்ந்தவருக்கு உயர் பதவி வழங்கப்படுகிறது என்பதால் யாரும் மறுப்பு சொல்ல மாட்டார்கள் என்பது பாஜகவின் கணக்கு.
மற்றவர்களும்...
இந்த ஜனாதிபதி ரேஸில் சுமித்ரா மகாஜன், டி.சி. கெலாட் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அதேவேளையில் துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கய்யா நாயுடுவை இறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. துணைக் குடியரசுத் தலைவர்தான் ராஜ்யசபா தலைவராகவும் இருப்பார். ராஜ்யசபாவில் மட்டும்தான் பாஜக இன்னும் பெரும்பான்மை பலத்தைப் பெறாமல் உள்ளது. எனவே வெங்கையா நாயுடு ராஜ்யசபா தலைவரானால், பாஜகவுக்கு சற்று தெம்பாகவும், பலமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று சொல்லப்பட்டது.
வெங்கையா இல்லை
இதனிடையேஎ ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வுக்கான குழுவை பாஜக அமைத்துள்ளது. அதில் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, அமித் ஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். துணை ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு வெங்கையாவின் பெயர் அடிப்பட்ட நிலையில் அவர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளதால் அவருக்கு அப்பதவி இல்லை என்றே தெரிகிறது.