ஜேஎன்யு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயார்; வெங்கய்யா நாயுடு
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) விவகாரம் உள்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில், பிப்ரவரி 25-ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 29-ஆம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு நடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது எதிர்கட்சிகளின் அமளியால் பல மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை. அந்த மசோதாக்களை நடப்பு கூட்டத் தொடரின்போது நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
மேலும் பட்ஜெட் கூட்டத்தொடரை பிரச்சினைகள் இன்றி சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த, அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அமைச்சர் வெங்கய்ய நாயுடு அழைப்பு விடுத்தார். டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், அதிமுக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் தற்கொலை விவகாரம் உள்பட அனைத்துப் பிரச்னைகளையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.
அரசு எந்தத் தவறையும் செய்யவில்லை. எனவே அனைவரும் தங்கள் பிரச்சினையைக் கூறி விவாதிக்க வாய்ப்பு அளிக்கப்படும். ஜேஎன்யு விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை மக்களும் அறிந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி, ஆலோசனை செய்து அனைத்து முடிவுகளையும் எடுக்கலாம். நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கும் நடவடிக்கைகள் வேண்டாம்.
காங்கிரஸ், இடதுசாரிகள் அல்லாத மாநில கட்சிகள் நாடாளுமன்றம் சுமுமாக நடைபெறுவதையே விரும்புகின்றன. நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்குவதால் முக்கியப் பிரச்சினைகளைப் பேச முடியவில்லை என்று அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், ஒவ்வொரு முறை நாடாளுமன்றம் கூடும்போதும் இந்த முறையாவது அவை நடவடிக்கைகள் பயனுள்ள வகையில் இருக்க வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஜிஎஸ்டி உள்பட முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி, வணிக மசோதா, உள்நாட்டு நீர்வழி மசோதா, விமானக் கடத்தலுக்கு எதிரான மசோதா உள்ளிட்டவை மிகவும் முக்கியமானவை என்றார் வெங்கய்ய நாயுடு.
அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பிறகு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், செய்தியாளர்களிடம் கூறுகையில், வெங்கய்ய நாயுடு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒப்புக்காக நடத்தப்பட்டதாகும். நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் பாஜக தலைவர்கள் மீது பிரதமர் மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நாடாளுமன்றம் சுமுகமாக நடக்க வேண்டுமா? வேண்டாமா என்பது மத்திய அரசின் கைகளில்தான் உள்ளது.