உலகின் 10 சிறந்த தலைவர்களில் மோடி... எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கு வெங்கைய நாயுடு பதில்
ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்த எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக, உலகில் தலைசிறந்த தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக திகழ்கிறார் என மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார் என எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இது குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில்,
இந்தியா தற்போது உலகளவில் அங்கீகரிக்கப்படும் நாடாகவும், மதிக்கப்படும் நாடாகவும் உள்ளது. பிரதமர் மோடிக்கு ஒவ்வொரு நாடும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது. அவரின் முயற்சி மற்றும் அணுகுமுறை காரணமாக தலைசிறந்த 10 தலைவர்களில் ஒருவராக பிரதமர் உருவெடுத்துள்ளார்.
நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் பிரதமரின் நடவடிக்கைக்கு அனைவரும் பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது. பிரிக்ஸ் வங்கியின் முதல் பிரநிதித்துவத்தை இந்தியா பெற்றிருக்கிறது. 196 நாடுகள் தங்களது நாட்டில் யோகா தினத்தை கடைபிடிக்க ஒப்புக் கொண்டுள்ளன. மோடியின் பரிந்துரை உலகளவில் ஏற்கப்படுகிறது என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணமாகும்.
பருவ நிலை மாற்றம், தீவிரவாதம் போன்றவை தொடர்பாக மோடி தெரிவிக்கும் கருத்துக்களை உலக நாடுகள் கவனித்து வருகின்றன. ஜக்கிய முற்போக்கு ஆட்சியின் போது, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் 75 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அவரது பயணத்தால் என்ன பயன் எற்பட்டது என்பதை கவனிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.