விமானம் தாமதம்: முக்கிய நிகழ்ச்சியை தவறவிட்ட வெங்கையா நாயுடு ஏர் இந்தியா மீது கடும் அதிருப்தி
டெல்லி: ஏர் இந்தியா விமானம் ஒரு மணிநேரம் தாமதம் ஆனதால் முக்கிய நிகழ்ச்சியை தவறவிட்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கடும் அதிருப்தி அடைந்துள்ளார். மேலும் இதுகுறித்து ஏர் இந்தியா விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று மதியம் ஹைதராபாத் செல்ல திட்டமிட்டு இருந்தார். இதற்காக பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் ஏர் இந்தியா விமானத்தில் முன்பதிவு செய்திருந்த வெங்கையா நாயுடு, பயணம் செய்ய ஏதுவாக 12.30 மணிக்கு டெல்லி விமான நிலையம் வந்து சேர்ந்தார்.
ஆனால், 1.45 வரை விமானம் கிளம்பவில்லை பின்னர் விமானி வரவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2.30 மணிக்கு விமானம் புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், கடும் அதிருப்தி அடைந்த வெங்கையா நாயுடு, டுவிட்டர் மூலமாக தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது:‘இது போன்ற சம்பவங்கள் எவ்வளவு நடக்கின்றன என்பதை ஏர் இந்தியா விளக்க வேண்டும். வெளிப்படைத் தன்மையும் பொறுப்புணர்வும் இந்த நேரத்தில் அவசியம் தேவை. சவால் நிறைந்த உலகில் நாம் உள்ளோம் என்பதை ஏர் இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் அறுவுறுத்தியுள்ளார்.
விமானம் தாமதமானதற்கு மிகுந்த வருத்தத்தை பதிவு செய்து கொள்வதாகவும், விமானி போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால், இந்த தாமதம் ஏற்பட்டதாகவும் ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ தெரிவித்துள்ளார்.