இந்திய அணியின் 'கோச்' பதவிக்கு வெங்கடேஷ் பிரசாத்தும் அப்ளிகேஷன் போட்டார் !
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்தும் விண்ணப்பித்துள்ளார்.
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்ற போட்டி கடுமையாகியுள்ளது. ஏற்கனவே, ரவி சாஸ்திரி, சந்தீப் பாட்டில் ஆகியோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், வெங்கடேஷ் பிரசாத்தின் வருகையால் போட்டி மேலும் அதிகரித்துள்ளது.
இன்று காலை தனது விண்ணப்பத்தை சமர்ப்பித்ததாக, வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார். இதையடுத்து, இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா சார்பாக, 33 டெஸ்ட் போட்டிகள், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள வெங்கடேஷ் பிரசாத், சிறந்த பந்துவீச்சாளராக பெயர் பெற்றவர். தற்போது பிசிசிஐ ஜூனியர் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு கமிட்டியின் தலைவராக உள்ளார்.
ஏற்கனவே இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகச் செயல்பட்டுள்ளார் வெங்கடேஷ் பிரசாத். இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சி வழங்கிய காலகட்டத்தில்தான், டோணி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.