சிசேரியன் ஆபரேஷனின்போது டாக்டர்கள் திடீர் சண்டை.. சிசு மூச்சுத் திணறி பரிதாப பலி!
ராஜஸ்தான் மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் வாய்த் தகராறில் ஈடுபட்டனர். இதனால் குழந்தை பலியானது.
ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் அறுவை சிகிச்சை அறையில் சிசேரியன் செய்தபோது மருத்துவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனால் குழந்தை மூச்சு திணறி பலியானது.
ஜோத்பூரில் உள்ளது உமைத் மருத்துவமனை. இங்கு பிரசவத்துக்காக ஒருவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு இயற்கையாக குழந்தை பிறப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால் அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்கள் முயற்சித்தனர்.
அப்போது அவருக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கினர். அப்போது அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை செய்வதை விட்டுவிட்டு ஒருவரை ஒருவர் தாக்க முற்படும் அளவுக்கு சென்றுவிட்டனர்.
குழந்தை பலியானது
இதனால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது. இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறுகையில், பிரசவத்துக்கு அப்பெண் வரும்போது சிசுவின் இதயதுடிப்பு குறைந்திருந்தது. குழந்தையின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பணிநீக்கம்
வாய்த் தகராறில் ஈடுபட்டவர்கள் மகப்பேறு சிகிச்சை நிபுணர் டாக்டர் அசோக் நேனிவால், மயக்கமருந்து நிபுணர் டாக்டர் எம்எல் தாக் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த இரு மருத்துவர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தகராறுக்கான காரணம்
முக்கியமான அறுவை சிகிச்சையின்போது அதுவும் குறைந்த இதயத்துடிப்புடன் குழந்தை உள்ளே இருப்பது தெரிந்தும் இவர்களுக்குள் என்ன தகராறு நடந்தது என்று தெரியவில்லை. எனினும் வெளியான வீடியோவில் உங்கள் வரம்பை மீறாதீர் என்று ஒரு மருத்துவர் மற்றொருவரிடம் கூறுவது கேட்கிறது.
செல்போன் விதிமீறல்
இந்த வாய்த்தகராறையும், இதனால் குழந்தை இறந்ததையும் அறுவை சிகிச்சை அறைக்குள் இருந்த மருத்துவமனை ஊழியர் படம் பிடித்துள்ளார். இதனால்தான் இந்த உண்மை வெளியே வந்தது என்கிற போதிலும் நோய்த் தொற்று காரணமாக செல்போனை அறுவை சிகிச்சை அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்ற தடை இருந்தும் ஊழியர் செல்போனை எப்படி கொண்டு சென்றார் என்றும் தெரியவில்லை. கடவுளுக்கு அடுத்து தெய்வமாக பார்ப்பது மருத்துவர்களையே. அந்த மருத்துவர்களே குழந்தையின் உயிருக்கு எமான வந்தது வேதனைக்குரியதாகும்.