சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு: 1,000 பக்கங்களில் தயாரித்த நீதிபதி, இன்னும் சில மணி நேரங்களில்...
பெங்களூர்: பரபரப்பாக இருக்கிறது பரப்பன அக்ரஹாரா வளாகம். இந்த சிறையில் உள்ள காந்தி சதனில்தான் ஜெயலலிதா, மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
சிறைக் கைதிகளுக்கான கவுன்சிலிங் மற்றும் ஒழுக்கப் பயிற்சி வகுப்புகள் நடத்தும் இடமாக காந்தி சதன் செயல்படுகிறது. இங்குதான் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது!
முதல்முறை முதல்வராக
கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரையில் முதலமைச்சர் பதவியில் இருந்த ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி, 1996ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
18 ஆண்டுகால வழக்கு
அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
1000 பக்கங்களில் பரபரப்பு தீர்ப்பு
இதனையடுத்து அரசுத் தரப்பு இறுதி வாதம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு இறுதி வாதம் முடிவடைந்து இன்றைய தினம் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதற்காக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, ஏறத்தாழ 1,000 பக்கங்களை நெருங்கி வரும் தீர்ப்பை எழுதி முடித்துவிட்டாராம்.
ஆபரேசன் போர்சன்
1,000 பக்கங்கள் என்றால், அரசுத் தரப்பு வாதம் மற்றும் எதிர்தரப்பு வாதத்தை அப்படியே எடுத்துக்கொண்டு அதற்குக் கீழ், நீதிபதி தன்னுடைய தீர்ப்பை எழுதுவார். இதைத்தான் 'ஆபரேஷன் போர்ஷன்' என்பார்கள்.
தன் கையால் தீர்ப்பு
நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தன்னுடைய லேப்டாப்பில் தானே அவற்றை டைப் செய்துள்ளாராம். இதற்காக ஸ்டெனோவைக்கூட அமர்த்திக் கொள்ளவில்லையாம்.
யாரையும் சந்திக்கவில்லை
அந்த நான்கு நாட்களும் உணவு, தண்ணீர் தவிர வேறு எதற்காகவும் யாரையும் நீதிபதி சந்திக்கவில்லை. தினமும் காலை 11 மணிக்கு நீதிமன்றம் வந்து தனது சேம்பரில் உட்கார்ந்து தீர்ப்பு தொடர்பான வேலைகளை கவனித்து விட்டு மாலை 5 மணிக்குத்தான் சென்றாராம். தனிப்பட்ட முறையில் யாரையும் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டாராம். இன்னும் சில மணிநேரங்களில் தீர்ப்பு வெளியாகப்போகிறது.
144 தடை உத்தரவு
இதற்காக பல்லாயிரக்கணக்கான அதிமுகவினர் பெங்களூருவில் குவிந்துள்ளனர். பரப்பன அக்ரஹாரா வளாகத்தைச் சுற்றிலும் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
1 மணிக்கு பரபரப்பு தீர்ப்பு
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, பரப்பன அக்ரஹாரம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை வெளியிடுகிறார்.