4-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: லாலு குற்றவாளி- ஜெகநாத் மிஸ்ரா விடுவிப்பு- சிபிஐ கோர்ட்
ராஞ்சி: 4-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கான தும்கா கருவூல மோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லாலுவுக்கான தண்டனை விவரம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்.
பீகார் மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், மற்றொரு முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் 30 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 3 மாட்டுத் தீவன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
லாலுவுக்கு மொத்தம் 13.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 4-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்காக தும்கா கருவூல மோசடி விசாரிக்கப்பட்டது. இதன் விசாரணை கடந்த 5-ந் தேதி நிறைவடைந்தது.
இவ்வழக்கில் இன்று ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் ஜெகநாத் மிஸ்ரா குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்.
லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் வெள்ளிக்கிழமை அன்று அறிவிக்கப்பட உள்ளது.
ஊழல் வழக்குகளில் சிறை தண்டனையை அனுபவிப்பதால் லாலுவால் 6 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.