தனி மனித ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே.. ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு #Aadhar
சென்னை: தனிமனித ரகசியத்தை பாதுகாப்பது என்பது அடிப்படை உரிமையாகும் என்று ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது.
சமையல் எரிவாயு இணைப்பு முதல் மதிய உணவு, உர மானியம், வங்கிக்கணக்கு, செல்போன் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட மத்திய அரசின் பல மானியங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது, கட்டாயமாக்கி வருகிறது.
ஆதார் எண் இணைப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆதார் கார்டு முறை தனிநபர் மற்றும் சமத்துவ உரிமையை மீறுவதாக உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதுதொடர்பான வழக்கு கடந்த ஜூலை மாதம் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமை இல்லை என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தனி நபர் ரகசியம் என்பது அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வருமா என்பது குறித்து 9 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்" என்று தெரிவித்தனர்.
ஆதார் கார்டில் தனிநபர் தகவல் ரகசியத் தன்மை பாதுகாப்பு என்பது குடிமகன்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வருமா என்பது குறித்த வழக்கு 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு நீதிபதிகள் இன்று முக்கியத்தீர்ப்பை அளித்தனர். அதில், தனி மனித ரகசியம் என்பது தனிமனித உரிமை ஆகும். அதாவது அரசியல் சாசன 21-வது பிரிவின்படி தனி மனித ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
தீர்ப்பின் முழு விவரம் விரைவில் வெளி வரும்.