முதலில் ஸ்மிருதி இராணியின் படிப்புச் சான்றிதழை செக் பண்ணுங்க.. டென்ஷன் தரும் மோடி தம்பி
காஸியாபாத்: டெல்லி சட்ட அமைச்சரின் கல்விச் சான்றிதழ் விவகாரத்தைப் போலவே மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியின் கல்வித் தகுதி சர்ச்சையாக உள்ளது. எனவே அவரது சான்றிதழையும், கல்வித் தகுதியையும் விசாரித்து சரி பார்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி பிரகலாத் மோடி கூறியுள்ளார்.
அகில இந்திய நியாய விலைக் கடை டீலர்கள் சம்மேளனத்தின் துணைத் தலைவராக இருக்கிறார் பிரகலாத். காஸியாபாத் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆம் ஆத்மி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ஜிதேந்தர் சிங் டோமரின் கல்வித் தகுதியைப் போலவே இராணியின் கல்வித் தகுதியும் சர்ச்சையாக உள்ளது. டோமரின் சான்றிதழை சரி பார்த்தது போலவே இராணியின் சான்றிதழையும் சரி பார்க்க வேண்டும். இதுகுறித்து விசாரணை நடத்தப்படவும் வேண்டும்.
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், லலித் மோடிக்கு உதவியது மனிதாபிமான அடிப்படையில்தான். அதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை. அரசியலாக்கக் கூடாது.
கருப்புப் பணத்தை வெளிக் கொணர்வதில் மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டுதான் உள்ளது. உண்மையில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை விட அதிக அளவில் இந்தியாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
ரேஷன் கடைகள் மூலம் காஸ் சிலண்டர்களை விநியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் பிற பொருட்களை விற்பது போல காஸ் சிலிண்டர்களையும் விற்கலாம். இதன் மூலம் டீலர்களுக்கு வருமானம் பெருகும், ஊழலும் குறையும் என்றார் அவர்.