மூன்றடுக்குகளைக் கொண்டதாக மாறுகிறது மத்திய திட்டக் கமிஷன் - ஜேட்லி தகவல்
டெல்லி: மத்திய திட்டமிக் கமிஷனை மாற்றியமைக்க பெரும்பாலான மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. விரைவில் இதுதொடர்பான முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆரம்பத்திலிருந்தே திட்டக் கமிஷனைப் பிடிக்காது. காரணம், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் அது பாரபட்சம் காட்டுவதாக முதல்வராக இருந்தபோதே குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில் அவர் பிரதமரானதுமே திட்டக் கமிஷனை ஒழிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்தக் கட்டம் வந்துள்ளது.
இன்று டெல்லியில் மாநில முதல்வர்கள் மாநாட்டை மத்திய அரசு நடத்தியது. இதற்கு மோடி தலைமை தாங்கினார். நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்ட அமைச்சர்களும், மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் பேசுகையில், திட்டக் கமிஷனை சக்தி வாய்ந்த அமைப்பாக மாற்றியமைக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இதற்குப் பெரும்பாலான மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
டீம் இந்தியா என்ற கொள்கைக்கேற்ப கமிஷன் செயல்பட வேண்டும் என்று பிரதமரும் விரும்புகிறார். எனவே, பிரதமர்- மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய மாநில அரசு அதிகாரிகள் என மூன்றடுக்கு கமிஷனாக இது மாற்றியமைக்கப்படும். இதுதொடர்பான ஆலோசனைகள், விவாதங்கள் நடந்து வருகின்றன.
அனைத்து ஆலோசனைகளும் முடிவடைந்த பின்னர், அனைவருடைய கருத்துக்களையும் அறிந்த பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார் ஜேட்லி.