பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் மரணம்.. ஊடகத்துறைக்கு பேரிழப்பு
பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் டெல்லியில் மரணம் அடைந்துள்ளார்.
டெல்லி: பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் டெல்லியில் மரணம் அடைந்துள்ளார்.
டெல்லியில் வசித்து வந்த குல்தீப் நய்யார் 95 வயதில் மரணம் அடைந்துள்ளார். குல்தீப் பாகிஸ்தானின் பஞ்சாப் அருகே உள்ள சியால்கோட்டில் 14 ஆகஸ்ட் 1923ல் பிறந்தார். அதன்பின் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, இந்தியாவிற்கு குடிபெயர்ந்தார்.
குல்தீப் உருது பத்திரிக்கையாளராக சிறுவயதில் தன் பணியைத் துவங்கியவர். இவர் சட்டம் படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இடதுசாரி பார்வையாளரான இவர், கவனிக்கப்பட வேண்டிய நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார்.
குல்தீப் மொத்தம் 11 புத்தகங்களை எழுதியுள்ளார். இதில் அவர் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை குறித்து எழுதியதும், நேருவின் அரசியல் குறித்து எழுதியதும், கார்கில் போர் குறித்து எழுதியதும் மிக முக்கியமான புத்தகங்களாக பார்க்கப்படுகிறது.
'நேருவுக்குப் பிறகு இந்தியா' 'எல்லைகளுக்கு இடையே', 'தூரத்து உறவினர்கள் : துணைக் கண்டத்தின் கதை' ஆகிய புத்தகங்கள் பெரிய புயலை கிளப்பியது. அதுமட்டும் இல்லாமல் பத்திரிக்கைகளில் இவர் எழுதி வந்த தொடர்களும் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.
குல்தீப் நய்யார் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். அதேபோல் ஐ.நா அவையில் இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வயோதிகம் காரணமாக, இன்று காலை அவர் மரணம் அடைந்தார். அவரது உடல் டெல்லியில் அடக்கம் செய்யப்பட உள்ளது. பிரதமர் மோடி இவரது மறைவிற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.