உடம்புக்கு முடியலை.. தேர்தலில் போட்டியிடவில்லை.. பின்வாங்கினார் கேபிஏசி லலிதா
திருவனந்தபுரம்: கேரள சட்டசபைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என, மலையாள நடிகை கேபிஏசி லலிதா அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு, கேரளா உட்பட 5 மாநில சட்டசபைத் தேர்தல் வருகின்ற மே மாதம் 16 ம் தேதி நடைபெறுகிறது.
தமிழ்நாடு போன்று கேரளா மாநிலத்திலும் சட்டமன்றத் தேர்தல் களைகட்டி வருகிறது. இந்நிலையில் நடிகை கேபிஏசி லலிதா தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருக்கிறார்.
கேபிஏசி லலிதா
கேபிஏசி லலிதா கேரள மாநில சட்டசபைத் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்திருக்கிறார் என கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.
தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறிய லலிதாவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை வெளிப்படையாக அளித்தது.
உடல்நிலை
இந்நிலையில் இந்தத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என லலிதா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் " என்னுடைய உடல்நிலை மற்றும் சினிமா காரணமாக இந்தத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. என்னுடைய இந்த முடிவை நான் ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனிடம் தெரிவித்து விட்டேன்" என்று கூறியிருக்கிறார்.
இந்திய ஜனநாயக
கேரளாவின் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு லலிதா தேர்தலில் நிற்பதற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக நேற்று அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருந்தனர். கடந்த வாரம் வடக்கன்சேரி பகுதி முழுவதும் லலிதா வேட்பாளராக நிற்பது போன்ற போஸ்டர்கள் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பினராயி விஜயன் இதுகுறித்து நிருபர்களிடம் " வடக்கன் சேரியில் லலிதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், வேட்பாளராக நிறுத்த ஆலோசனை மேற்கொண்டு வந்தோம். வடக்கன்சேரியில் எங்கள் வேட்பாளராக லலிதா போட்டியிட்டிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். லலிதாவைப் போன்ற வேட்பாளர்கள் நிற்பது கட்சியின் மதிப்பை உயர்த்தும்" என்று தெரிவித்திருக்கிறார்.
கட்சிக்குள் எழுந்த தொடர் கண்டனங்களால் தான், கேபிஏசி லலிதா தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.