விழா மேடையில் சரஸ்வதி படம் இருந்ததற்கு எதிர்ப்பு... இலக்கிய விருதை வாங்க மறுத்த மராத்திய கவிஞர்!
நாக்பூர்: விழா மேடையில் சரஸ்வதி உருவப்படம் இருந்ததால் மராத்தி கவிஞர் யஷ்வந்த் மனோகர் வாழ்நாள் சாதனையாளர் விருதை வாங்க மறுத்துவிட்டார்.
பொதுவாக இலக்கிய நிகழ்ச்சிகளில் மதம் இருப்பதை தான் அங்கீகரிக்கவில்லை. அதனால் விருதை மறுத்து விட்டதாக யஷ்வந்த் மனோகர் விளக்கம் அளித்துள்ளார்.
மராத்தி மொழியின் மூத்த கவிஞர் யஷ்வந்த் மனோகர் ஆவார். இவருக்கு விதர்பா சாகித்ய சங்கம் (வி.எஸ்.எஸ்) 'வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவித்தது. இந்த நிலையில் இந்த விருதை ஏற்க மூத்த மராத்தி கவிஞர் யஷ்வந்த் மனோகர் மறுத்துவிட்டார். வி.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் ஜான்சியில் விருது வழங்கும் விழா கடந்த 14-ம் தேதி நடந்தது.
அப்போது நிகழ்ச்சியில் 'சரஸ்வதி பூஜை' செய்து, அந்த மேடையில் சரரஸ்வதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்ததால் யஷ்வந்த் மனோகர் மிக உயர்ந்த இலக்கிய விருதை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த விழாவில் யஷ்வந்த் மனோகர் பங்கேற்கவில்லை.
விருதினை வாங்க மறுத்தது தொடர்பாக கவிஞர் யஷ்வந்த் மனோகர் வி.எஸ்.எஸ் அமைப்புக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பொதுவாக இலக்கிய நிகழ்ச்சிகளில் மதம் இருப்பதை நான் அங்கீகரிக்கவில்லை. மேடையில் இருந்த அந்த கடவுளின் உருவப்படம் "பெண்கள் மற்றும் ஷுத்ராக்களை கல்வி மற்றும் அறிவிலிருந்து தடைசெய்த சுரண்டலின்" அடையாளமாகும். விதர்பா சாகித்ய சங்கா ஒரு எழுத்தாளராக எனது பங்கையும் எனது எண்ணங்களையும் அறிந்து கொள்ளும் என நினைக்கிறேன். சரஸ்வதி தேவியின் உருவம் இருக்கும் என்று ஏற்கனவே எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
எனது மதிப்புகளை மறுப்பதன் மூலம் என்னால் அந்த விருதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே நான் அதை பணிவுடன் மறுத்துவிட்டேன். சரஸ்வதி தேவிக்கு பதிலாக, சாவித்ரிபாய் பூலேவின் புகைப்படத்தையும், இலக்கிய அல்லது பொது நிகழ்வுகளில் அரசியலமைப்பின் நகலையும் வைத்திருப்பதற்கான சாத்தியத்தை பரிசீலிக்குமாறு அனைத்து கலைஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மகாராஷ்டிரா அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறேன் என்று கவிஞர் யஷ்வந்த் மனோகர் தெரிவித்தார்.