பசுவதை தடை விவகாரத்தில் இந்துக்களை அவமானப்படுத்திய மோடி... தொகாடியா பாய்ச்சல்
டெல்லி: பசுவதை தடை விவகாரத்தில் இந்துக்களை பிரதமர் மோடி அவமானப்படுத்திவிட்டதாக விஸ்வ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் பிரவீன் தொகாடியா சாடியுள்ளார்.
பிரதமர் மோடி அண்மையில், பசுவை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் சிலர் நாட்டின் அமைதியை சீர் குலைக்கிறார்கள் அவர்கள் சமூக விரோத கும்பல்கள் என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு பிரவீன் தொகாடியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தொகாடியா கூறியதாவது:
வீழ்த்த முடியாது...
பிரதமர் மோடி அரசு, பசுக்களை கொல்லும் கசாப்பு கடைக்காரர்களுக்கு முழு உரிமையையும், அனுமதியையும் வழங்கி இருக்கிறது. அதே நேரத்தில் பசுவை பாதுகாக்க நினைப்பவர்களை வீழ்த்த முயற்சிக்கிறது.
மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு தடை
மோடி அரசு மாட்டு இறைச்சியின் ஏற்றுமதிக்கு தடை விதிப்போம் என்று உறுதி அளித்தது. ஆனால், கடந்த 2 ஆண்டில் மாட்டு இறைச்சி ஏற்றுமதி 44% உயர்ந்துள்ளது.
அவமதிக்கிறார் மோடி
பசுவை பாதுகாக்க குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக மோடி கருத்துக்களை வீசுகிறார். அவருடைய செயல்பாடுகள் அதிருப்தியை தருவது மட்டுமல்ல, அவமதிப்பையும் தருவதாக இருக்கிறது.
ஆங்கிலேயர் காலத்தில் கூட பசுவதை தடை சட்டங்கள் இருந்தன. அந்த காலத்தில் கூட இல்லாத அளவுக்கு இப்போது இந்து மக்கள் அவமதிப்புக்கும், அவமானப்படுத்துதலுக்கும் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். பசுவை பாதுகாக்க நினைப்பவர்களுக்கு எதிராக அரசின் செயல்பாடுகள் உள்ளன.
உத்தரவாதம் எங்கே?
மோடி அரசு நாடு முழுவதும் பசுக்களை கொல்வதை தடை செய்வோம் என்று அளித்த உத்தரவாதம் என்ன ஆனது? இந்த உத்தரவாதத்தை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்த்தால் அவர்கள் லட்சக்கணக்கான இந்து மக்களின் நம்பிக்கையை அவமதிக்கிறார்கள்.
இதயங்களை உடைத்தவர் மோடி
பசுக்களை கொல்வதை தடுக்க உரிய ஆலோசனைகளை பிரதமர் வழங்குவார் என எதிர்பார்த்தோம். ஆனால், அவர் எங்களின் இதயங்களை உடைத்து விட்டார். எங்களால் பசுவை பாதுகாக்க முடியவில்லை என்றால் இதைவிட தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்வது மேலானது.
பசுகாவலர்கள் மீது நடவடிக்கையா?
மத்திய அரசு உடனடியாக உரிய சட்டத்தை கொண்டு வந்து பசுக்கள் கொல்லப்படுவதை நாடு முழுவதும் தடுக்க வேண்டும். மோடி பசு காவலர்களுக்கு எதிராக கூறிய கருத்துக்களை திரும்ப பெற வேண்டும். மாநில அரசுகள் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் செயல்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
பசுவதை தடுப்பு சட்டம் உடனடி தேவை
பிரதமர் நரேந்திர மோடி எனக்கு குழந்தை பருவத்தில் இருந்தே நண்பர் ஆவார். அவர், நான் சொல்வதை நிறைவேற்றுவார். தனது கடமையை செய்வார் என நான் எதிர்பார்க்கிறேன். ஒரு காலத்தில் நாம் பசுவதைக்கு எதிராக கடுமையாக போராடி இருக்கிறோம். இந்த போராட்டமும், கடும் உழைப்பும் உங்களை பிரதமர் ஆக்கி இருக்கிறது. ஆனால், இன்று நீங்கள் பசுவதைக்கு எதிரானவர்களை அவமதிக்கிறீர்கள். உடனடியாக பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க நாடாளுமன்ற இரு சபைகளையும் வைகளையும் ஒன்றாக கூட்டி உரிய முடிவை எடுங்கள். பொடா சட்டம் கொண்டு வர வாஜ்பாய் என்ன செய்தாரோ அதே போல் நீங்களும் செயல்படுங்கள். அதற்கான சட்டம் கொண்டு வரும் வரை பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க உரிய அமைப்பை ஏற்படுத்துங்கள். நான் எப்போதுமே பொறுப்புள்ள முறையில்தான் பேசுவேன்.
அரசியல் சதி
இந்த பிரச்சினையில் தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுவதன் பின்னணியில் அரசியல் சதி இருக்கிறது. இவ்வாறு தொகாடியா கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். கண்டனம்
தொகாடியாவின் இந்த கருத்துகளுக்கு ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் கருத்துகளை ஆதரிப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ளது.