சகிப்பின்மை பற்றி பேசியதற்காக ஷாருக்கானின் தில்வாலே படக்காட்சியை நிறுத்திய வி.ஹெச்.பி, பஜ்ரங் தள்
மங்களூர்: நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்று கூறியதற்காக ஷாருக்கான் நடித்த தில்வாலே படத்தை திரையிட்ட மங்களூர் தியேட்டர்கள் முன்பு விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆட்கள் போராட்டம் நடத்தியதால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
நாட்டில் சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பது கவலையான விஷயம் என்று தெரிவித்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள தில்வாலே படம் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் ஆட்கள் கர்நாடக மாநிலம் மங்களூரில் தில்வாலே படம் ஓடிய மல்டிபிளக்ஸுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். மேலும் சூரத்கல்லில் உள்ள தியேட்டர் முன்பும் ஞாயிற்றுக்கிழமை மாலை போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து படம் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் இன்றும் மங்களூரில் தில்வாலே படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து விஷ்வ இந்து பரிஷத்தின் தக்ஷின கன்னடா தலைவர் ஜகதிஷ் ஷெனாவா கூறுகையில்,
நாடும், மக்களும் ஷாருக்கானை ஸ்டார் ஆக்கிவிட்டனர். நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்று அவர் கூறியதால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். தற்போது சகிப்புத்தன்மையின்மை என்றால் என்னவென்பதை நாங்கள் காட்ட விரும்புகிறோம். இந்த போராட்டம் ஷாருக்கான் முஸ்லீம் என்பதற்காக அல்ல அவரின் கருத்துக்காக தான் என்றார்.
தில்வாலே படத்தை தாங்கள் கூறும்வரை திரையிடக் கூடாது என தியேட்டர் உரிமையாளர்களை கேட்டுக் கொண்டதாக பஜ்ரங் தள் தலைவர் ஷரண் தெரிவித்துள்ளார்.