மசூதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்க கோரும் வி.ஹெச்.பி.!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்து அமைப்புகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளவதில் மும்முரம் காட்டுகின்றன.
மும்பையில் விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வெங்கடேஸ் அப்தியோ நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மகாராஷ்டிராவில் மசூதிகளில் தொழுகையின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு மாநில அரசு தடை விதிக்க வேண்டும். ஆண்டுதோறும் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்து பண்டிகைகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தினால் சிலர் நீதிமன்றத்துக்குப் போய்விடுகின்றனர்.
மும்பை சித்தி விநாயகர் கோவில், ஸ்ரீரடி சாய்பாபா கோயில், பந்த்ராபூர் விட்டல் கோயில், துல்ஜா பவானி கோயில் ஆகியவற்றை இந்து அறக்கட்டளைகளிடம் அரசு ஒப்படைக்க வேண்டும். தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் பேஷன் ஷோக்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தி போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.
இவ்வாறு வெங்கடேஸ் அப்தியோ தெரிவித்தார்.