கர்நாடகாவில் திப்புசுல்தான் பிறந்த நாள் விழாவில் வன்முறை: வி.ஹெச்.பி பிரமுகர் உட்பட 2 பேர் சாவு
பெங்களூர்: திப்புசுல்தான் பிறந்த நாளை கொண்டாடியோருக்கும், அதை எதிர்த்த இந்து அமைப்புகளுக்கும் நடுவே ஏற்பட்ட மோதலில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கர்நாடகாவில் மத மோதல்களை உருவாக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ அல்லது நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக கோரிக்கைவிடுத்துள்ளது.
மைசூர் மண்டலத்தில் ஆட்சி நடத்திய மன்னர் திப்பு சுல்தான். வெள்ளையருக்கு எதிரான போரில் கொல்லப்பட்டதாக வரலாறு உள்ளது. அதேநேரம், கர்நாடகாவை சேர்ந்த இந்து அமைப்புகள், திப்பு சுல்தான், தேசத்துக்கு எதிராக செயல்பட்டவர் என்று குற்றம்சாட்டிவருகின்றன. பாடபுத்தகங்களில் திப்பு சுல்தான் வரலாறை நீக்க வேண்டும் என்று, கோரிக்கைவிடுத்து வருகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டு முதல் திப்புசுல்தான், பிறந்த நாளை மாநில அரசு விழாவாக கொண்டாட உள்ளதாக முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இதை இந்து அமைப்புகள் மட்டுமின்றி, பாஜகவும் எதிர்த்தது. திப்பு குறித்து எதிர்மறை கருத்து உள்ளதால் அதை அரசு விழாவாக கொண்டாட கூடாது என்று பாஜக கோரிக்கைவிடுத்தது.
முஸ்லிம்களை திருப்திப்படுத்த, திப்பு சுல்தான் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவதாகவும், மக்களின் வரிப்பணத்தை அரசு வீண் செய்வதாகவும், விழா நடத்தினால் அதை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்தது.
இருப்பினும், திப்பு சுல்தான் பிறந்தநாளை, அரசு விழாவாக கொண்டாடும் முடிவில் அரசு உறுதியாக இருந்தது. திப்பு சுல்தான், ஒரு சுதந்திர போராட்ட வீரர், எனவே, அவரது பிறந்த நாளை கொண்டாடுவதை யாரும் எதிர்க்க கூடாது என்று சித்தராமையா கோரிக்கைவிடுத்திருந்தார்.
இதையடுத்து நேற்று மாநிலம் முழுவதும் திப்பு ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடகு மாவட்ட தலைநகர் மடிகேரியில் கொண்டாட்டம் நடைபெற்றபோது, இந்து அமைப்பினர் எதிர்போராட்டம் நடத்தினனர். அப்போது இரு தரப்புக்கும் மோதல் வெடித்தது. கல்வீச்சு சம்பவம் அரங்கேறியது.
பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தில் குடகு மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் குட்டப்பா, படுகாயங்களுடன் அதே இடத்தில் உயிரிழந்தார். ராஜு என்பவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
எதிர்தரப்பினரின் கல்வீச்சில் குட்டப்பா உயிரிழந்ததாக பாஜக குற்றம் சாட்டிவரும் நிலையில், கலவரத்தை சுவர் மீது ஏறியிருந்து பார்த்துக்கொண்டிருந்தபோது குட்டப்பா தவறி விழுந்து இறந்துவிட்டதாக முதல்வர் சித்தராமையா மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்.பி கூறியுள்ளனர். ராஜுவும் தவறி விழுந்து இறந்ததாக கூறியுள்ளனர்.
மாநில அரசு உண்மையை மூடி மறைக்க பார்ப்பதாக குற்றம்சாட்டிய பாஜக எம்.எல்.ஏவும், முன்னாள் துணை முதல்வருமான அசோக், இதுகுறித்து நீதிவிசாரணை அல்லது சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளியேவரும் என்று கூறினார்.
இதனிடையே குட்டப்பா இறுதி சடங்கு இன்று குடகு மாவட்டத்தில் அவரது சொந்த ஊரில் நடைபெற இருப்பதால் மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. வரும் 13ம் தேதி மாநிலம் தழுவிய பந்த்துக்கு இந்து அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன.