'படேல்' போராட்டத்துக்கு வி.ஹெச்.பி. தொகாடியா ஆதரவு! குஜராத் அமைச்சர்கள் நடமாட முடியாது என மிரட்டல்!!
ராஜ்கோட்: "எங்களுக்கு இடஒதுக்கீடு கொடு; இல்லையேல் அனைவருக்கும் இடஒதுக்கீட்டை ரத்து செய்" என்ற முழக்கத்தை முன்வைத்து குஜராத்தில் போராட்டம் நடத்தி வரும் படேல் சமூகத்தினருக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் ஆதரவு தெரிவித்துள்ளது. படேல் சமூகத்தினரின் கோரிக்கையை ஏற்காவிட்டால் குஜராத் அமைச்சர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைமை உருவாகும் என்று அந்த இயக்கத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் திடீரென படேல் சமூகத்தினர் இடஒதுகீட்டு கோரி கிளர்ச்சி நடத்தினர். அதே நேரத்தில் இந்த கிளர்ச்சிக்கு தலைமை வகித்த ஹர்திக் படேல், எங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுங்கள்; இல்லையென்றால் ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீடு முறையையே ரத்து செய்யுங்கள்" என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறார்.
இது இடஒதுக்கீட்டை ஒழிக்க இந்துத்துவா சக்திகள் மேற்கொள்ளும் முயற்சி என்பது சமூக நீதி ஆதரவாளர்களின் குற்றச்சாட்டு. இதை நிரூபிக்கும் வகையில் தற்போது படேல்களின் இந்த போராட்டத்துக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொகாடியா கூறியதாவது:
படேல்களின் கோரிக்கைகளை குஜராத் அரசாங்கம் ஏற்காமல் போனால் மிகவும் மோசமான நிலைமை உருவாகும். குஜராத் அமைச்சர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்படும்.
அவர்கள் ஒன்றும் வாடகைக்கு அழைத்துவரப்பட்ட கூட்டம் அல்ல. இந்த அரசுக்கு எதிரான கோபத்தின் வெளிப்பாடுதான் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்ட படேல்களின் போராட்டம் என்பதை அரசு மனதில் வைக்க வேண்டும்.
இவ்வாறு பிரவீன் தொகாடியா கூறினார்.
முதல் முறையாக....
படேல்களின் இடஒதுக்கீடு கோரும் போராட்டம் தொடங்கிய போது இந்த விவகாரத்தில் சமாதானம் செய்யப் போவதாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கூறியிருந்தது. பின்னர் யார் இந்த ஹர்திக் படேல் என்ற ஊடகங்களின் ஆராய்ச்சியில் அவர் கைத் துப்பாக்கியுடன் பிரவீன் தொகாடியாவுடன் இருக்கும் படங்கள் வெளியாகின.
இந்துத்துவா கொள்கையை முன்வைத்திருந்தாலும் குஜராத் பாரதிய ஜனதா அரசை கடுமையாக விமர்சித்து வருபவர் தொகாடியா. அவர்தான் படேல் சமூகத்தினரை தூண்டிவிடுகிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இவற்றையெல்லாம் தொகாடியா மறுத்து வந்தார்.
தற்போது வெளிப்படையாக முதல் முறையாக படேல்களின் போராட்டத்துக்கு தொகாடியா ஆதரவளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.