போலி விளம்பரத்தை நம்பி 1000 ரூபாய் பறிகொடுத்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு!
விளம்பரத்தை பார்த்து உடல் எடையைக் குறைக்க ஆசைப்பட்டு ஏமாந்து போனதாக குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு புலம்பியுள்ளார்.
Recommended Video
டெல்லி: விளம்பரத்தை பார்த்து உடல் எடையைக் குறைக்க ஆசைப்பட்டு ஏமாந்து போனதாக குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு புலம்பியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றைய ராஜ்ய சபா கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலி விளம்பரங்கள் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு போலி விளம்பரத்தை பார்த்து தான் ஏமாந்து போன அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
உடல் எடை குறையும்..
அதாவது வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதி பதவிக்கு வந்த பின் ஒரு நாள் விளம்பரம் ஒன்றை பார்த்தாராம். அதில் உடல் எடையை குறைக்கும் மாத்திரையை சாப்பிட்டால் உறுதியாக உடல் எடை குறையும் என கூறப்பட்டுள்ளது.
பணத்தையும் கட்டியுள்ளார்..
இதைத்தொடர்ந்து ஸ்லிம்மாக ஆசைப்பட்ட வெங்கையா நாயுடு உடனடியாக அந்த நிறுவனத்தை தொடர்புகொண்டு மாத்திரைகள் குறித்து விசாரித்துள்ளார். அப்போது ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மாத்திரை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பணத்தை கட்டியுள்ளார் வெங்கையா நாயுடு.
வேண்டுமானால் இன்னொரு 1000
ஆனால் மாத்திரைகளுக்கு பதில் அவருக்கு இ மெயில் ஒன்று வந்ததாம். அதில், தேவைப்பட்டால் மற்றொரு மாத்திரையை வாங்கிக்கொள்ளுங்கள். அதுவும் ஆயிரம் ரூபாய்தான் என்றிருந்ததாம். மேலும் விரைவாக உடல் எடை குறையும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
மத்திய அமைச்சரிடம் புகார்
இதனை பார்த்த வெங்கையா நாயுடு முதல் மாத்திரையை அனுப்பினால்தான் 2-வது மாத்திரையை வாங்க முடியும் என்றாராம். அதன்பின் அந்த விளம்பரம் மீது சந்தேகம் அடைந்த அவர், மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானிடம் புகார் அளித்தாராம்.
விசாரணையில் வெளியான உண்மை
இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த மாத்திரையை தயாரிக்கும் நிறுவனம் டெல்லியை சேர்ந்தது இல்லை என்றும் அமெரிக்காவை சேர்ந்தது என்றும் தெரியவந்தது என்று வெங்கையா நாயுடு கூறினார்.
கடும் சட்டம் - வலியுறுத்தல்
இதுபோன்ற போலி விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்ற முடியாத வகையில் கடுமையான சட்டங்களும், போலியாக விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என குடியரசுத் துணை தலைவரும் ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.