ஹமீது அன்சாரி எங்கே?: வாயைக் கொடுத்து அசிங்கப்பட்ட பாஜக தலைவர் மாதவ்
டெல்லி: சர்வதேச யோகா தினத்தையொட்டி டெல்லி ராஜ்பாத்தில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி அழைக்கப்படவில்லை என்று அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச யோகா தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகா செய்தனர். யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு மோடி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் யோகா நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி ஏன் கலந்து கொள்ளவில்லை என ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். அதன் பிறகு அவர் ட்வீட்டை அழித்துவிட்டு துணை ஜனாதிபதியின் உடல்நலம் சரியில்லாததால் அவர் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்தார்.
துணை ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளோ, ஹமீது அன்சாரிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவில்லை. அவர் நலமாக உள்ளார். யோகா நிகழ்ச்சிக்கு அவரை அழைக்கவில்லை என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தனர்.
ராம் மாதவ் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மக்களின் வரிப்பணத்தில் ஓடும் ராஜ்யசபா டிவியில் ஏன் யோகா தின நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவில்லை என்றும் மாதவ் கேள்வி எழுப்பியிருந்தார். அந்த டிவி சேனல் ராஜ்யசபா தலைவரான ஹமீது அன்சாரியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.