சோட்டா ராஜனின் நிழலுலக சாம்ராஜ்ய புதிய சக்கரவர்த்தி யார் தெரியுமா?
மும்பை: சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் வலதுகரமாக விளங்கிய விக்கி மல்கோத்ரா, அந்த நிழலுலக சாம்ராஜ்யத்தை கையிலெடுத்து நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் எதிராளியான சோட்டா ராஜன் இந்தோனேஷியாவில் வைத்து 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது நிழலுலக சாம்ராஜ்யத்தையும், தொழில்களையும் யார் கையில் எடுக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான பதில்தான் விக்கி மல்கோத்ரா.
சுற்றி வளைத்த தாவூத் ஆட்கள்
ராஜனின் மிக நெருங்கிய கூட்டாளியாக கடந்த 20 வருடங்களாக நகமும், சதையுமாக இருப்பவர்தான் விக்கி மல்கோத்ரா. 2000மாவது ஆண்டில் பாங்காங் ஹோட்டலில் வைத்து ராஜனை போட்டுத்தள்ள தாவூத் கும்பல் நெருங்கியது. அந்த தாக்குதலில் ராஜன் தப்பினார்.
சோட்டா ராஜன் குரூப்பில் விரிசல்
அதன்பிறகு, ராஜனின் நெருங்கிய கூட்டாளிகள் ரவி பூஜாரி, சந்தோஷ் ஷெட்டி போன்றோர் அவரிடமிருந்து விலகினர். ஆனால், விக்கி மல்கோத்ரா மட்டும் நம்பிக்கைக்குரியவராக தொடர்ந்தார்.
சாம்ராஜ்ய சக்கரவர்த்தி
ஆஸ்திரேலியாவில் ராஜன் மறைந்திருந்தபோது, சோட்டா ஷகில் ஆட்கள், அவரை நெருங்கினர். எப்படியும் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தால், விக்கி மல்கோத்ராவை தொடர்பு கொண்ட ராஜன், இனிமேல் தனது சாம்ராஜ்யத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டதாக கூறப்படுகிறது.
இரு சவால்கள்
இந்தோனேஷியா வந்த ராஜன், பிறகு இன்டர்போல் போலீசாரிடம் சிக்கியுள்ளார். இனிமேல் விக்கி மல்கோத்ராவுக்கு இரு பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. ஒன்று, இனன்டர்போல் கண்ணில் மண்ணை தூவி பிழைப்பு நடத்துவது. மற்றொன்று, தாவூத் ஆட்கள் கையில் சிக்காமல் இருப்பது.