தடுப்பூசி போடுவது சாத்தானின் செயல்: வைரல் ஆகும் கேரள முஸ்லீம் தலைவரின் பேச்சு
மலப்புரம்: தடுப்பூசி போடுவது இஸ்லாத்திற்கு எதிரானது. அது சாத்தானின் செயல் ஆகும் என்று முஸ்லீம் அமைப்பு ஒன்றின் தலைவர் ஒருவர் கேரளாவில் நடந்த கூட்டத்தில் பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
கேரள மாநிலத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் மலப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டிப்தீரியா நோய் இல்லாமல் இருந்தது. தடுப்பூசியால் நோய் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது சில முஸ்லீம் அமைப்புகள் தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதால் நோய் பரவியுள்ளது.
டிப்தீரியாவுக்கு கடந்த மாதம் 2 சிறுவர்கள் பலியாகினர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவில் நடந்த முஸ்லீம் சிறுமிகள் மற்றும் பெண்கள் இயக்க கூட்டத்தில் முஸ்லீம் அமைப்பு ஒன்றின் தலைவர் கலந்து கொண்டு தடுப்பூசிக்கு எதிராக பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
தடுப்பூசியால் பல வகை நோய்கள் பரவுகின்றது. தடுப்பூசி போடுவது சாத்தானின் செயல் ஆகும். தடுப்பூசி நல்லது என்பார்கள் ஆனால் அது விஷம். இப்படித் தான் ஆப்பிள் நல்லது என்று பாம்பு ஆதமிடம் தெரிவித்தது.
கருவில் குழந்தையை 9 மாதங்கள் பாதுகாக்க தெரிந்த இறைவனுக்கு அதன் பிறகும் அதை பாதுகாக்கத் தெரியும். கடவுளின் வேலையை பூர்த்தி செய்ய மனிதன் எதற்கு?
பிரசவத்திற்கு மருத்துவர் எதற்கு?. கடவுள் பார்த்துக் கொள்வார். என் மனைவி, மகள், தெரிந்த பெண்கள் யாரும் மருத்துவர் உதவியுடன் பிரசவிக்க விட மாட்டேன். இதை நம்புமாறு நான் உங்களை வற்புறுத்தவில்லை. என் நம்பிக்கையைத் தான் கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.