விஜய் மல்லையா 'தேடப்படும் குற்றவாளி'... டெல்லி நீதிமன்றம் அறிவிப்பு!
தொழிலதிபர் விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
டெல்லி : அந்நிய செலாவணி மோசடி செய்ததாக வெளிநாடு தப்பிச் சென்ற விஜய் மல்லையா மீது அமலாக்கத் துறை வழக்கு பதிந்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு மல்லையா ஆஜராகாததால் அவரை தேடப்படும் குற்றவாளியாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தொழிலதிபர் விஜய் மல்லையா மீது அந்நிய செலாவணி மோசடி பிரிவின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணை இன்று டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு மல்லையாவிற்கு பல முறை அமலாக்கத்துறை அவரது கிங்பிஷர் நிறுவன அலுவலகம் மற்றும் வீட்டிற்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்று நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் முன்வைக்கப்பட்டது.
லண்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளல் 1996 முதல் 98 வரை நடைபெற்ற பார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கிங்பிஷர் லோகோவை விளம்பரப்படுத்துவதற்காக பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றிற்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது குறித்து மல்லையாவிற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்துள்ளது. இந்த பணப்பரிவர்த்தனையானது ரிசர்வ் வங்கி விதிகளுக்கு மாறாக நடந்திருப்பதாகவும் அந்நிய செலாவணி மோசடி நடந்திருப்பதாகவும் மல்லையா மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த விசாரணைக்கு ஆஜராகாததால் 2000ம் ஆண்டில் விஜய் மல்லையா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது. இதில் அந்த ஆண்டே டிசம்பர் மாதத்தி மல்லையா நேரில் ஆஜராக நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. எனினும் வங்கிகளிடம் கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு மல்லையா தலைமறைவாகிவிட்ட நிலையில், இந்த வழக்கு இப்போது தீவிரமடைந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது தான் விஜய் மல்லையாவிற்கு ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்தது. இந்நிலையில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பதற்கு அமலாக்கத்துறை கண்டனம் தெரிவித்த நிலையில் விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.