விஜய் மல்லையா மார்ச் 2-ல் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்... உச்சநீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் தகவல்
டெல்லி: தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த 2-ந் தேதியே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி தெரிவித்தார். இவ்வழக்கில் பதிலளிக்குமாறு விஜய் மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் 17 வங்கிகளில் சுமார் 10,000 கோடிக்கு கடன் வாங்கி அதை திருப்பி கட்டவில்லை விஜய்மல்லையா என்பது புகார். அவர் தலைவராக இருந்த யுபி நிறுவனப் பங்குகளையும் இங்கிலாந்தின் டியாஜியோ நிறுவனத்திடம் விற்றுவிட்டார்.
இதில் மல்லையாவுக்கு ரூ515 கோடி கிடைத்தது. இதனைத் தொடர்ந்து விஜய் மல்லையா வெளிநாடு சென்றுவிடக் கூடும் எனக் கூறப்பட்டது. ஆனால் இதை மல்லையா மறுத்துவந்தார்.
இதனைத் தொடர்ந்து விஜய் மல்லையா வெளிநாடு செல்லத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் 17 வங்கிகள் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கு நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் ரொஹிண்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, விஜய் மல்லையா ரூ9,000 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தவில்லை. அவரது கடன் மதிப்பை விட சொத்துகள் அதிகம் உள்ளன. அவர் கடந்த 2-ந் தேதியே வெளிநாடு சென்றுவிட்டார் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மல்லையா கடன் ஏய்ப்பாளர் எனத் தெரிந்தும் அவருக்கு மீண்டும் மீண்டும் ஏன் கடன் கொடுத்தீர்கள் என வங்கிகள் தரப்பு வழக்கறிஞர்களை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் விஜய் மல்லையா 2 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 30-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.