கடனை திருப்பிச் செலுத்தாத விவகாரம்: அமலாக்கத்துறை முன்பு இன்றும் விஜய்மல்லையா ஆஜராகவில்லை
மும்பை: ஐடிபிஐ வங்கியில் ரூ.900 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா மும்பை அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் இன்றும் ஆஜராகவில்லை. தாம் ஆஜராக மே இறுதிவரை அவகாசம் தருமாறும் விஜய்மல்லையா கேட்டுள்ளார்.
விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான யுனைடெட் புரூவரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் ஐடிபிஐ, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அந்தத் தொகை திருப்பி செலுத்தப்படாமல் உள்ளது. இதையடுத்து அந்த வங்கிகள் அளித்த புகாரின்பேரில் அமலாக்கத் துறை மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் ஐடிபிஐ வங்கியில் ரூ.900 கோடி கடன் பெற்றது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும்படி விஜய் மல்லையாவுக்கு அமலாக்கத் துறை 2 முறை சம்மன்களை அனுப்பியது. ஆனால் 2 முறையும் அவர் ஆஜராகததால் இன்று ஆஜராகும்படி 3 ஆவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் இன்றும் அவர் ஆஜராகவில்லை. அத்துடன் தாம் ஆஜராவதற்கு மே மாதம் இறுதி வரை அவகாசம் கோரியிருக்கிறார் விஜய்மல்லையா.