மல்லையா விமானத்தை ஏலம் விட்டு பிரிச்சு மேஞ்சுட்டாங்களாமே...!
மும்பை: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கடன் பாக்கியை வசூலிக்க அதன் நிறுவனர் விஜய் மல்லையாவின் தனி விமானம் ஏலம் விடப்பட்டது. தற்போது அதன் பாகங்கள் பிரிக்கப்பட்டு 'காயலான்' கடைக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.
மதுபான தயாரிப்பு தொழிலில் கொடிகட்டிப் பறந்த விஜய் மல்லையா கிங் பிஷர் ஏர்லைன்ஸ் எனும் விமான சேவையை தொடங்கினார். அத்துடன் 11 இருக்கைகள் கொண்ட தனி விமானத்தையும் அவர் பயன்படுத்தி வந்தார்.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானம் நிதி நெருக்கடிக்குள்ளானது. ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 2012ஆம் ஆண்டு இதன் விமான சேவை நிறுத்தப்பட்டு உரிமமும் ரத்தானது.
சுமார் ரூ7 ஆயிரம் கோடிக்கு அளவுக்கு விஜய் மல்லையாவுக்கு கடன் இருக்கிறது. இதனால் கடன் கொடுத்த வங்கிகள் விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்கி வைத்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக விஜய் மல்லையா பயன்படுத்தி வந்த தனி விமானம் அண்மையில் ஏலம் விடப்பட்டது. மும்பை சர்வதேச விமான நிலையம் நடத்திய இந்த ஏலத்தில் குர்லாவை சேர்ந்த சைலன்ட் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் ரூ. 22 லட்சம் ரூபாய்க்கு விமானத்தை வாங்கியது.
பராமரிப்பின்றி பழுதடைந்த அந்த விமானத்தின் பாகங்கள் உடைக்கப்பட்டு தனித்தனியாக பிரித்தெடுக்கும் பணி இரவு பகலாக நடைபெற்றது. மேலும் மும்பையின் வில்லே பார்லேயில் உள்ள ரூ100 கோடி மதிப்புள்ள கிங் பிஷர் மாளிகையும் விஜய் மல்லையாவின் கைவிட்டு போக இருக்கிறது.