ஈயம், பித்தாளை பேரீச்சம்பழத்திற்கு போடப்பட்ட விஜய் மல்லையாவின் குட்டி விமானம்
மும்பை: கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் கடனை அடைக்க அதன் உரிமையாளர் விஜய் மல்லையாவின் குட்டி விமானம் குப்பை விலைக்கு விற்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தை ஏலத்தில் எடுத்தவர்கள் அதை பாகம், பாகமாக பிரித்து விற்றுள்ளனர்.
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் ஊசலாடியது. இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்நிறுவன விமானங்கள் செயல்படாமல் போயின. இதையடுத்து டிசம்பர் மாதம் கிங்ஃபிஷனர் ஏர்லைன்ஸின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் நின்றிருந்த மல்லையாவின் தனிப்பட்ட வேலைக்காக பயன்படுத்தப்படும் 11 இருக்கைகள் கொண்ட சொகுசு விமானம் ஏலத்தில் விடப்பட்டது. அதை சைலன்ட் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் ரூ.22 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.
அந்நிறுவனம் விமானத்தை பாகம், பாகமாக பிரித்து அதை விற்று பணத்தை பெற்றுள்ளது. அந்த விமானத்தை பாகம், பாகமாக பிரிக்கும் வேலையே 2 வாரங்களுக்கு மேல் நடைபெற்றது. விமான பாகங்களை பிரிக்க ஊழியர்கள் தினமும் 8 மணிநேரம் வேலை பார்த்துள்ளனர்.
விமான பாகங்கள் விற்கப்பட்டு மீதமுள்ளவற்றை மும்பை கர்லாவில் உள்ள பழைய இரும்பு சாமான்கள் கொட்டும் இடத்தில் போடப்பட்டுள்ளது.