விஜய் மல்லையாவை எம்.பி. பதவியில் இருந்து உடனே நீக்க ராஜ்யசபா ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை!
டெல்லி: வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடிய தொழிலபதிபர் விஜய் மல்லையாவின் ராஜ்யசபா எம்.பி. பதவி ராஜினாமா கடிதத்தை ஏற்று அவரை உடனே நீக்குமாறு ராஜ்யசபா ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைத்துள்ளது.
நாட்டின் பல வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார் விஜய் மல்லையா. இந்த விவகாரத்தில் அவருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளது.
அவரது பாஸ்போர்ட்டை மத்திய அரசும் முடக்கியது. இந்த நிலையில் தனது ராஜ்யசபா எம்.பி. பதவியை விஜய் மல்லையா நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக ராஜ்யசபா ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அவர் கடிதம் எழுதி இருந்தார்.
ஆனால் ராஜ்யசபா ராஜினாமா கடிதம் முறைப்படி அனுப்பப்படவில்லை. அதில் உள்ள விஜய்மல்லையாவின் கையெழுத்து உண்மையானது தானா? என்றும் தெரியவில்லை. எனவே அவரது ராஜினாமா நிராகரிக்கப்படுவதாக நேற்று ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று விஜய் மல்லையாவின் ராஜினாமாவை ஏற்று அவரை உடனே பதவி நீக்கம் செய்யுமாறு ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைத்துள்ளது.