குஜராத் புதிய முதல்வராக விஜய் ரூபானி தேர்வு; துணை முதல்வரானார் நிதின் பட்டேல்
அகமதாபாத்: குஜராத் மாநில புதிய முதல்வராக அம்மாநில பாஜக தலைவர் விஜய் ரூபானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வராக பட்டேல் சமூகத்தை சேர்ந்த நிதின் பட்டேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
குஜராத்தில் பாஜக முதல்வராக ஆனந்திபென் பதவி வகித்தார். படேல் சமூகத்தவரின் போராட்டம், ஊழல் புகார் போன்றவற்றை அவர் திறம்பட கையாள முடியாமல் திணறியதாக கூறப்பட்டது. மேலும், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் பாஜக மீது சரமாரியாக புகார் அளித்தனர். இந்நிலையில் தனக்கு75 வயதாகி விட்டதாக கூறி முதல்வர் பதவியை ஆனந்திபென் ராஜினாமா செய்தார்.
ஆனந்திபென் ராஜினாமாவை கட்சி ஏற்றுக்கொண்டதை அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்க தேசிய கட்சித் தலைவர் அமித் ஷாவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதனையடுத்து அகமதாபாத்தில் பாஜக எம்எல்ஏ.க்களுடன் அமித் ஷா ஆலோசனை இன்று ஆலோசனை நடத்தினார்.
விஜய் ரூபானி, நிதின் பட்டேல், மற்றும் பூபேந்திரசிங் சுதசமா ஆகியோர் பெயர் முதலமைச்சருக்கான போட்டியில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் குஜராத்தின் புதிய முதலமைச்சராக மாநில பாஜக தலைவர் விஜய் ரூபானி தேர்வு செய்யப்பட்டார். நிதின் பட்டேல் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
182 எம்.எல்.ஏ.க்கள் உள்ள குஜராத்தில் பட்டேல் சமூகத்தை சேர்ந்த நிதின் பட்டேல் கடந்த 1995ம் ஆண்டில் இருந்து அம்மாநில அமைச்சரவையில் இடம்பெற்று வருகிறார்.
குஜராத் மாநில புதிய முதல்வராக விஜய் ரூபானி செயல்படுவார் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்தார். நிதின் பட்டேல் துணை முதல்வராக பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. விஜய் ரூபானி மற்றும் நிதின் பட்டேலுக்கு பாஜக அமித்ஷா, நிதின் கட்காரி, ஆனந்திபென் பட்டேல் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.