நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் - விஜயபாஸ்கர் நம்பிக்கை
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
டெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் எந்த சட்ட சிக்கலும் வராது என்று நட்டாவிடம் விளக்கம் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
நீட் நுழைவுத்தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் மருத்துவ மாணவர்களுக்கான தகுதி நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்க அளிக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து இந்த கோரிக்கையை வலியுறுத்தும் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கள் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நட்டாவை சந்தித்து பேசினர்.
இதனிடையே நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு தற்போது விலக்கு அளிக்க முடியாது என ஜே.பி.நட்டா, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி பின்னர் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
மத்திய அமைச்சர் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் எந்த சட்ட சிக்கலும் வராது என்று நட்டாவிடம் விளக்கம் அளித்ததாகவும் அவர் கூறினார்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறிய அவர், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு கேட்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.