அடி, உதை, கோபம், ஆவேசம்... டிரேட் மார்க் ஆகிப் போன விஜயகாந்த்தின் குணாதிசயங்கள்!
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளார்களிடம் விஜயகாந்த் ஆவேசப்பட்டு அடிப்பேன் என்று சீறிப் பாய்ந்தது அவர் இன்னும் முதிர்ச்சியான தலைவராகவில்லை என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளது.
ஆனால், அவருடைய அரசியல் வரலாற்றில் இது ஒன்றும் புதியதல்ல. ஊமை விழிகளில் பார்த்த அந்த கம்பீரமான, விவேகமான விஜயகாந்த் இன்று வெறும் "ஆவேசம்" கொண்ட விஜயகாந்த்தாக மட்டுமே இருக்கின்றார்.
நேற்றைய முடிவிற்குப் பின்னர் ஹீரோவான விஜயகாந்த் இன்று ஒரே நாளில் ஜீரோ ஆகிவிட்டார் தேவையில்லாத கோபத்தினால்.
பாஸ்கருக்கு விழுந்த அடி:
முதன்முதலில் தர்மபுரியில், தேர்தல் பிரசாரத்தின்போது என் பேர் பாஸ்கர், பாண்டி இல்லை என்று தப்பாகப் பேசிய விஜயகாந்த்தை திருத்திய தேமுதிக வேட்பாளரை பொதுமக்கள் முன்னிலையிலேயே வேனுக்குள் வைத்துக் கும்மி எடுத்தார் விஜயகாந்த்.
உனக்கெதுக்குடா பதில்:
அதன் பின்னர் 2014 பிப்ரவரியில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கினை சந்தித்து விட்டு சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் கூட்டணி பற்றி கேள்வி கேட்ட டிவி நிருபரிடம் "போயா உனக்கு பதில் சொல்ல முடியாது" என்று நாக்கை துருத்தி சத்தமிட்டு கோபத்தைக் காட்டினார்.
கோபம் இருக்குமிடத்தில்:
அதன்பிறகு ஏப்ரல் 11, 2014ல் மனுசன் என்றால் கோபம் வரனும், கோவம் இருக்கற இடத்தில்தான் குணமிருக்கும் என்று வேறு தனது கோபங்களுக்கு விளக்கம் வேறு கொடுத்தார்.
ரசிகருக்கு பளார்:
அதன் ஈரம் காய்வதற்குள் இதற்கெல்லாம் மைல் கல்லாக மலேசியாவில் அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள முயன்ற ஷாஜகான் என்ற ரசிகருக்கு விட்டார் ஒரு "பளார்". இதனால் அவருடைய ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர்.
சிகரம் வைத்த டெல்லி ஆவேசம்:
இதற்கெல்லாம் சிகரம் வைத்தார்ப் போல்தான் இன்றைய ஆவேச சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரு தலைவனுக்குண்டான முக்கிய பண்புகளில் ஒன்றான பொறுமையும், விவேகமும் இவரிடம் இல்லாததையே இச்சம்பம் காட்டுகின்றது.
இதுக்கு "அண்ணி"யே டெல்லி போயிருக்கலாம் போல... என்னவோ போங்கப்பா!!