இந்திராகாந்தி ஸ்டைல் உடை... மேடக் தொகுதி வாக்காளர்களைக் கவர விஜயசாந்தியின் அதிரடி
மேடக்: சமீபத்தில் காங்கிரஸில் சேர்ந்த நடிகை விஜயசாந்தி வாக்காளர்களைக் கவருவதற்காக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி போன்றே உடையணிந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
சினிமாவில் அடிதடி சண்டைக் காட்சிகளில் அதகளப் படுத்திய நடிகை விஜயசாந்தி தற்போது ஆந்திர அரசியலில் முக்கிய சக்தியாக உள்ளார். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு அரசியலில் குதித்த விஜயசாந்தி முதலில் பாஜகவில் சேர்ந்தார். பின்னர் தெலுங்கானா போராட்டம் வலுத்ததும் பாஜக-வில் இருந்து விலகி சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியில் இணைந்தார்.
சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து தெலுங்கானா கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு பெருகியது. இதற்கிடையே தெலுங்கானா கட்சி தலைவர் சந்திரசேகர ராவுக்கும் விஜயசாந்திக்கும் இடையே உண்டான கருத்து வேறுபாட்டால் சோனியா முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார் விஜயசாந்தி.
தற்போது காங்கிரஸ் கட்சிச் சார்பில் மேடக் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் விஜயசாந்தி அத்தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அடுத்த முதல்வர்...
தெலுங்கானா கட்சியினருக்கு சவால் விடும் வகையில் பிரச்சாரம் அமைய வேண்டும் என விஜயசாந்தி திட்டமிட்டுள்ளாராம். ஏனெனில் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும்பட்சத்தில் விஜயசாந்தி முதல்வர் பதவியை ஏற்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்திரா ஸ்டைல் பிரச்சாரம்...
இதற்காக தெலுங்கானா மாநில வாக்காளர்களை ஒட்டுமொத்தமாக கவர முடிவு செய்துள்ள விஜயசாந்தி மறைந்த பிரதமர் இந்திராகாந்தி ஸ்டைலில் உடைகள் அணிந்து தேர்தல் பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளார்.
மேடக் தொகுதி தான்...
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மேடக் தொகுதியில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே, அவரது உடை அலங்காரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் விஜயசாந்திக்கு வரவேற்பு அதிகமாகியுள்ளது.
இந்திரா காந்தியை பார்த்த மாதிரியே...
இந்த உடை அலங்காரத்தில் விஜயசாந்தி மறைந்த பிரதமர் இந்திராகாந்தி போன்றே காட்சியளிப்பதாக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரச்சார ஸ்டைலும் அப்படியே....
மேலும், அப்போது இந்திரா காந்தி எப்படி பிரசாரம் செய்தாரோ அதேமாதிரி விஜயசாந்தியின் பிரசார பேச்சு அமைந்துள்ளதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.
அச்சத்தில் தெலுங்கானா கட்சியினர்...
விஜயசாந்தியின் இந்த புதுமையான பிரசாரத்துக்கு நாளுக்கு நாள் பெருகி வரும் ஆதரவால் தெலுங்கானா கட்சியினர் கொஞ்சம் அரண்டு தான் போயுள்ளார்களாம்.
சென்னையில் மட்டும்...
இதற்கிடையே விஜயசாந்தி தனது வேட்பு மனுவில் தனக்கு ரூ.30 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார். அதில் ரூ. 27 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சென்னையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.