ஆசிய பசிபிக் குத்துச்சண்டை..ஆஸி., கெர்ரி ஹோப்பை வீழ்த்தி இந்திய வீரர் விஜேந்தர் சிங் சாம்பியன் !
டெல்லி: ஆசிய தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கெர்ரி ஹோப்பை வீழ்த்தி இந்தியாவின் விஜேந்தர் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் பட்டத்துக்கான தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டி தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் விஜேந்தர் சிங் (30 வயது, 75.7 கிலோ) - ஆஸ்திரேலிய வீரர் கெர்ரி ஹோப்பை (34 வயது, 74.9 கிலோ) எதிர்கொண்டார்.
தலா 3 நிமிடம் வீதம் 10 சுற்றுகள் கொண்டதாக நடந்த போட்டியில், இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக குத்துகள் விட்டு, ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். இறுதியில் இந்தியாவின் விஜேந்தர் சிங், ஆஸ்திரேலியாவை சேர்ந்த கெர்ரி கோப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். விஜேந்தர்சிங் 98-92, 98-92, 100-90 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு முதல் தொழில் முறை குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வரும் விஜேந்தர் சிங். முதல் 6 போட்டிகளிலும், எதிர்த்து மோதியவர்களை 'நாக்-அவுட்' முறையில் வீழ்த்தினார். நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 7-வது முறையாக அவர் வாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
10 ஆயிரம் ரசிகர்கள்:
தொழில்முறை குத்துச்சண்டையில் முதல்முறையாக சொந்த மண்ணில் களமிறங்கிய விஜேந்தர்சிங்கின் ஆட்டத்தை காண 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா, கிரிக்கெட் வீரர்கள் ஷேவாக், யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் என்று ஏராளமான பிரபலங்கள் குவிந்தனர்.
மோடி வாழ்த்து:
பட்டம் வென்ற விஜேந்தர் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கடின சண்டையின் மூலம் தகுதியான வெற்றி பெற்ற விஜேந்தருக்கு வாழ்த்துக்கள். மகத்தான திறமை, உடலுறுதியின் மற்றொரு வெளிப்பாடு என்று கூறியுள்ளார்.
Congratulations @boxervijender for a hard fought and well deserved win. It was yet another display of immense skill, strength & stamina.
— Narendra Modi (@narendramodi) July 16, 2016