விகாஸ் துபே கைதா? சரணா? உபி போலீசுக்கு அடுத்த தலைவலி... கட்டம் கட்டப்பட்ட 200 போலீசார்!!
உஜ்ஜைன்: உத்தரப்பிரதேசத்தின் பிரபல தாதா விகாஸ் துபே மத்தியப்பிரதேச போலீசாரிடம் சரணடைந்து இருப்பதாகவும், அந்த மாநில போலீசாரால் கைது செய்யப்படவில்லை என்றும் செய்தி வெளியாகியுள்ளது. இது உத்தரப்பிரதேச போலீசாருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
விகாஸ் துபேவை அரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத்தில் பார்த்தாகவும், அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கடந்த இரண்டு நாட்களாக உத்தரப்பிரதேசம் போலீசார் கூறி வந்தனர். இந்த நிலையில் விகாஸ் இன்று கைது செய்யப்பட்டு இருப்பது உத்தரப்பிரதேச போலீசாருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரவுடி விகாஸ் துபே கூட்டாளி சுட்டுக் கொலை... பாஜக எம்எல்ஏவை சந்தித்த விகாஸ்.. என்ன நடக்கிறது உபியில்!
எது உண்மை
தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, உஜ்ஜைனில் இருக்கும் மஹாகாளீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, வெளியே நின்று இருந்த பாதுகாப்பு காவலரிடம், தான் விகாஸ் துபே என்று அறிமுகம் செய்து, சரணடைய தயாராக இருப்பதாக கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து போலீஸ் மேல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு போலீசார் தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த அதிகாரிகள் அவரை கைது செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், கோயிலில் பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசார் இவரை அடையாளம் கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தாகவும், பின்னர் போலீசார் இவரை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.
மற்றொரு தகவலாக, அங்கிருக்கும் கடைக்காரர் இவரை அடையாளம் அறிந்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததாகவும், பின்னர் போலீஸ் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. போலி அடையாள அட்டை வைத்து இருந்ததாகவும், போலீசார் இவரது முகத்தில் ஒரு குத்து விட்டதாகவும், அப்போது, ''நான் கான்பூர்காரர், விகாஸ் துபே'' என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுடப்பட்ட விகாஸ் கூட்டாளி
உத்தரப்பிரதேச போலீசார் விகாஸின் கூட்டாளிகள் இருவரை நேற்று கைது செய்ய முயற்சித்தபோது ரன்பீர் என்பவர் எடவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவரான பிரபாத் மிஸ்ராவை ஃபரிதாபாத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். எடவாவில் போலீசாரிடம் இருந்து காரில் தப்பிச் செல்ல முயற்சித்தபோது ரன்பீர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது காரில் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவரை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ. 50,000 சன்மானம் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச போலீசார் அறிவித்து இருந்தனர்.
தவறான தகவல்
இந்தியா,நேபாளம் எல்லையில் தப்பிச் செல்லாமல் இருக்க பஹ்ரைச் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருந்தனர். நேபாளம் நாட்டிற்கு விகாஸ் துபே தப்பிச் சென்று விட்டதாக தகவல் கிடைத்துள்ளது என்று பஹ்ரைச் போலீஸ் எஸ்பி விபின் மிஸ்ரா தெரிவித்திருக்கும் நிலையில் மத்தியப்பிரதேசத்தில் விகாஸ் துபே கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசார்
கடந்த ஆறு நாட்களாக தேடியும் கிடைக்காமல், தற்போது மத்தியப்பிரதேச போலீசார் பிடியில் விகாஸ் துபே இருப்பது உபி போலீசாருக்கு தர்ம சங்கடத்தை மட்டுமின்றி, போலீசாரின் செயல்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது. விகாஸ் துபேவுக்கு உதவியாக இருந்த 200 உபி போலீசார் தற்போது விசாரணை வலைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். விகாஸ் மீது 60 வழக்குகள் உள்ளன. ஆனால், ஒன்றில் கூட இதுவரை அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை.