காவிரி விவகாரம்: கர்நாடகாவில் விக்ரமின் இருமுகன் ரிலீஸ் ஒத்திவைப்பு!
பெங்களூரு: காவிரி பிரச்சனையால் கர்நாடகா மாநிலத்தில் விக்ரம் நடித்த இருமுகன் திரைப்படம் இன்று வெளியிடப்படவில்லை.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் தமிழகத்துக்கு 20,000 கனஅடி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசுப் பேருந்துகள் கர்நாடகாவுக்குள் நுழைய போராட்டக்காரர்கள் தடை விதித்துள்ளனர். தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் தமிழ் டிவி சேனல்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.
மேலும் நாளை கர்நாடகா தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சமும் அங்குள்ளது.
இந்த நிலையில் விக்ரம் நடித்த இருமுகன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. ஆனால் கர்நாடகா மாநிலத்தில் இத்திரைப்படம் வெளியிடப்படவில்லை.
கர்நாடகாவில் இருமுகன் ரிலீஸ் ஆகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.