2016க்குள் அனைத்து கிராமங்களையும் “பிராட்பேண்ட்” மயமாக்க முடியும்.. டிராய்
டெல்லி: மத்திய அரசின் திட்டத்தின்படி 2016 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள சுமார் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கும் பிராட்பேண்ட் வசதி கிடைக்க செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும், இது சாத்தியமானதே என்று டிராய் தலைவர் ராகுல் குல்லார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிராய் தலைவர் ராகுல் குல்லார் , "நாட்டில் தற்போது 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. இவைகள் அனைத்திற்கும் தற்போது அகன்ற அலைவரியான பிராட்பேண்ட் வசதி செய்து தர டிராய் அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதற்கான திட்ட மதிப்பீடு சுமார் 20 ஆயிரத்து 100 கோடியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் இந்தியா இன்டர் நெட் பயன்பாட்டில் முன்னேறி வருவதை காணும் போது இவை சாத்தியமாக கூடும்.
மேலும் இந்த திட்டம் செயலாக்குவது என்பது மிகவும் எளிமையானது. முதலில் நான்கு மெட்ரோ நகரங்களை பிராட்பேண்ட் வசதியுடன் இணைக்க வேண்டும் அதனையடுத்து மெட்ரோ நகரங்களுடன் இரண்டாம் கட்ட நகரங்களை இணைக்க வேண்டும்.
பின்னர் அனைத்து தாலுகா மற்றும் அனைத்து கிராம பஞ்சாயத்துக்களை இணைக்க வேண்டும். இந்த இணைப்புகள் அனைத்தும் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்க முடியும்" என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "ஏற்கனவே இரண்டு தனியர் நிறுவனங்கள் 75 சதவீத பிராட் பேண்ட் வசதியினை வழங்கிவருகின்றனர். இன்று ஒரு தனியார் நிறுவனம் அனைத்து மாவட்டங்களுக்கும் 89 சத வீத பிராட் பேண்ட் வசதியினை கொடுக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளது.அப்படி இருக்கும் நிலையில் அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் இந்த தி்ட்டம் சாத்தியமே" என தெரிவித்தார்.