மனைவியை அடித்து கொன்ற கணவன்.. ஆத்திரத்தில் கணவனை அடித்து கொன்ற கிராம பொதுமக்கள்
பீகாரில் மனைவியை கொன்ற கணவனை கிராம பொதுமக்கள் ஆத்திரத்தில் கணவனை அடித்துக்கொன்றனர்.
ரோடாஸ்: பீகார் மாநிலத்தில் மனைவியைக் கணவன் அடித்துக் கொன்றதால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து கணவனை அடித்துக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
பீகார் மாநிலம், ரோடாஸ் மாவட்டம், விஷ்ரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் நட்(48). இவருடைய மனைவி துர்காவதி தேவி(40). இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த கோபால் நட் தனது மனைவியை ஒரு பெரிய கம்பால் தாக்கியுள்ளார்.
இதில், தலையில் படுகாயமடைந்த தேவி ரத்தவெள்ளத்தில் மிதந்துள்ளார். தேவியின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு அருகிலுள்ள சர்தார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தேவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாலும், அதிக அளவில் ரத்தம் வெளியேறியதாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், ஆத்திரம் அடைந்த கிராம பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து தேவியின் உயிரிழப்புக்கு காரணமான அவரது கணவன் கோபால் நட்டை அடித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த கோபால் நட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், உயிரிழந்த கணவன் மனைவி இரண்டு பேரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு பிரேதப் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.
மனைவியை அடித்துக் கொன்ற கணவனை கிராம பொதுமக்கள் அடித்துக்கொன்ற இந்த சம்பவம் தொடர்பாக முஃபஸில் காவல் நிலைய போலீஸார் இதில் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.