நிலக்கரி -காமன்வெல்த் ஊழல்: சிலருடைய பெயர்களை நீக்க நிர்ப்பந்தித்தது காங் - வினோத் ராய்
டெல்லி: நிலக்கரி பேர ஊழல் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல்களில் சம்பந்தப்பட்ட சிலருடைய பெயர்களை நீக்குமாறு காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தன்னை நிர்ப்பந்தம் செய்ததாக முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) வினோத் ராய் கூறியுள்ளார்.
'Not Just an Accountant', என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார் வினோத் ராய். செப்டம்பர் 15ம் தேதி இந்த நூல் வெளியிடப்படவுள்ளது. நூல் வெளியீட்டுக்கு முன்னதாக அதிலிருந்து சில பகுதிகளை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் சிஐஜியாக இருந்தபோது தான் காங்கிரஸ் தலைமையிலான அரசிடமிருந்து சில நெருக்கடிகளை சந்தித்தாக அவர் கூறியுள்ளார்.
தேடி வந்த அரசியல்வாதிகள்
அதில் நிலக்கரி பேர ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக சில அரசியல்வாதிகள் தனது வீட்டுக்கு வந்ததாகவும், சிலருடைய பெயர்களை வெளியிடாமல் அவர்களை காப்பாற்ற வலியுறுத்தியதாகவும் ராய் கூறியுள்ளார்.
மன்மோகன் சிங் மீதும் குற்றச்சாட்டு
மேலும் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங், பல்வேறு நெருக்குதல்கள், சகாயங்கள், கண்டிப்புகள், நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்ததால் நாட்டுக்கு எவ்வளவு பெரிய வருமான இழப்பு ஏற்பட்டது என்பதையும் தனது நூலில் விரிவாகச் சொல்லியுள்ளாராம் ராய்.
2ஜி முதல் நிலக்கரி ஊழல் வரை
வினோத் ராய் பதவிக்காலத்தின்போது மிகப் பெரிய 2ஜி ஊழல் விவகாரத்தை சிஏஜி அம்பலப்படுத்தியது. இதுகுறித்து வேறு சில சர்ச்சைகளும் பின்னர் எழுந்தன. அதேபோல நிலக்கரி ஒதுக்கீடு பேர ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல் ன பல ஊழல் புகார்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் கிளம்பின.
உள்நோக்கம் இல்லை
ராய் மேலும் கூறுகையில், நான் எழுதியுள்ள புத்தகத்தில் எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளேன். அதில் எந்த உள் நோக்கமும் இல்லை. அதே நேரத்தில் குற்றம் குறைகளையும் அவற்றை களைவதற்கான வழி முறைகளையும் செய்ய வேண்டிய மாற்றங்களையும் தெரிவித்துள்ளேன். ஏனெனில் எதிர்காலத்தில் அதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் தடுக்கும்.
சுவாரஸ்யமானது
நான் புத்தகம் எழுதும் போது அது கணக்கு தணிக்கை அறிக்கை போல் இல்லாமல் பொது மக்களிடம் நான் பணியாற்றிய காலத்தில் என்னைப் பற்றிய கணக்குகளை தெரிவிப்பது போல் இருந்தது மிகவும் சுவராஸ்யமானது என்று கூறியுள்ளார் ராய்.
காங்கிரஸ் கடும் கண்டனம்
ஆனால் ராயின் குற்றச்சாட்டுக்களை காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது. இது வெற்று பரபரப்புக்காக ராய் கூறும் குற்றச்சாட்டுகள் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறியுள்ளார். வினோத் ராயின் அடையாளமாக இந்த வெற்று பரபரப்புகளைக் கிளப்புவது மாறியுள்ளது என்றும் திவாரி கண்டித்தார்.
ஏன் முதலிலேயே சொல்லவில்லை
இதுகுறித்து திவாரி மேலும் கூறுகையில், தான் பதவியில் இருந்த காலத்தில் இதைச் சொல்லாமல் வினோத் ராய் விட்டது ஏன். அப்போதே மக்களிடம் இதைத் தெரிவித்திருக்கலாமே..
அது அவரது கடமை இல்லையா...
நெருக்குதல் கொடுத்தால், பெயரை நீக்கச் சொன்னால் அப்படிப்பட்டவர்களை மக்களிடம் அம்பலப்படுத்துவது இவரது கடமைதானே. அதை ஏன் அவர் செய்யவில்லை.
ரிடையர்ட் ஆனாலே இப்படித்தான்
அரசு அதிகாரிகள் அரசு தரும் அத்தனை சலுகைகளையும் பதவிக்காலத்தின் போது பெற்றுக் கொண்டு, ஓய்வு பெற்ற பின்னர் புத்தகம் எழுதுகிறேன் என்ற பேரில் இப்படி பரபரப்புக்காக குற்றம் சாட்டுவது மரபு போல மாறி வருகிறது.