அசாம் -மிசோரம் எல்லையில் இரு பிரிவினர் இடையே மோதல்... தொடர்ந்து நீடிக்கும் பதற்றம்..!
கவுகாத்தி: அஸ்ஸாம் -மிசோரம் மாநில எல்லையில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
அஸ்ஸாம் மிசோரம் மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 1995-ம் ஆண்டு முதல் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
இதனால் அஸ்ஸாம் மாநிலத்தின் எல்லையான கொலாசிப் மாவட்டம் மற்றும் மிசோரம் மாநில எல்லையான சச்சார் மாவட்டத்தில் அவ்வப்போது மோதல்கள் நிகழ்வது வழக்கம். இந்நிலையில் நள்ளிரவில் இரு மாநிலங்களின் எல்லையோர மாவட்ட மக்களிடையே ஏற்பட்ட மோதலில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இரு மாநில எல்லையோர பகுதியினர் கற்களை கொண்டும், தடிகளை கொண்டும் ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிக்கொண்டனர். மேலும், குடிசைகளும், டயர்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் பதற்றம் அங்கு அதிகரித்துள்ளது. கலவரக்காரர்களை ஒடுக்கும் வகையில் மிசோரம் அரசு ரிசர்வ் படையை மாநில எல்லையான சச்சார் மாவட்டத்தில் குவித்துள்ளது.
இதனிடையே நள்ளிரவு ஏற்பட்ட கலவரத்தால் காயமடைந்த நிலையில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார். நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வரும் மிசோரம் முதல்வர் ஜோரம் தங்கா, சச்சார் மாவட்ட மக்களை அமைதியாக இருக்குமாறும் அரசு நிர்வாகத்தை மீறி செயல்பட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இரு பிரிவினர் இடையேயான மோதல் குறித்து பேட்டியளித்துள்ள சச்சார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா, தொடர்ந்து பதற்றம் நீடித்தாலும் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை சிலர் மிகைப்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.
இதேபோல் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்ஸாம் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஜி.பி.சிங், இரு மாநில எல்லை பிரச்சனையில் விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறியுள்ளார்.