உள்ளாட்சி தேர்தல் வன்முறை.. நாகாலாந்தில் வாகனங்களுக்கு தீ வைப்பு.. 2 பேர் பலி.. பதற்றம்!
நாகாலாந்தில் உள்ளாட்சி தேர்தல் விவகாரமாக வன்முறை வெடித்து உள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
கொகிமா: நாகாலாந்து உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்த இட ஒதுக்கீட்டை கண்டித்து நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்து உள்ளது. இதில் 2 பேர் பலியாகினர்.
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் பிப்ரவரியில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பழங்குடியின அமைப்புகள் உள்பட பல அரசியல் கட்சியினரும் பல்வேறு போராட்ட்ங்களை நடத்தி வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தல் நாளான பிப்., 1 -ம் தேதி மாநிலம் தழுவிய பந்த்திற்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து நேற்று மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. தலைநகர் கொகிமா முழுவதும் வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
திமாபூரில் நடந்த வன்முறை சம்பவத்தில் 2 பேர் பலியாயினர். 10 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே, நாகா பழங்குடியின மக்கள் ஆயிரக்கணக்கானோர் தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். முதல்வர் டி.ஆர். ஜலியாங்க் பதவி விலக வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
மேலும் அரசு அலுவலகங்கள் மற்றும் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். போராட்டம் பல்வேறு இடங்களுக்கு பரவியுள்ளதால் மாநிலம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. தற்போது மாநிலம் முழுவதும் மொபைல் இன்டர்நெட் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான , கூடுதல் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.